கண்ணுக்கு தெரியாத சோர்ஸ்.. இபிஎஸ்க்கு அங்கீகாரம் எப்படி? வழக்கறிஞர் தமிழ்மணி பரபரப்பு கருத்து
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது குறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி தனது கருத்தை பிரபல ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். இது எடப்பாடி பழனிசாமி அணியினரால் மிக மிக கொண்டாடக்கூடிய வெற்றி என்று கூறியுள்ளார்.
அதிமுகவில் யாருக்கு முழு அதிகாரம் என்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இது தொடர்பாக வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையே சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனாலும் இதை தேர்தல் கமிஷன் அங்கீகரிக்காத நிலை இருந்துவந்தது. தேர்தல் கமிஷன் இதை அங்கீகரிக்க கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனுக்களும் அளிக்கப்பட்டன.இந்நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட வசதியாக, எடப்பாடி பழனிசாமி தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரித்து உத்தரவிட வேண்டும் என தேர்தல் கமிஷனில் மனு அளித்தார். அதேநேரத்தில் தேர்தல் கமிஷனுக்கு இது தொடர்பாக உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றத்தில் கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக உடனடியாக அங்கீகாரம் தந்து இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

இந்த வழக்கில் தேர்தல் கமிஷன் உரிய முடிவை எடுத்து 21-ந் தேதிக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கான காலக்கெடு நாளை (வெள்ளிக்கிழமை) முடிவடைய இருந்த நிலையில், தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியது. இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான அதிகாரிகள் காலையிலும், மாலையிலும் 2 கட்ட அமர்வுகளில் இது தொடர்பாக ஆலோசித்தனர். இதில் கட்சி அங்கீகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று அந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் அதிமுகவின் முழு கட்டுப்பாடும் இப்போது எடப்பாடி பழனிசாமி வசம் சென்றுவிட்டது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருப்பது குறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி பிரபல ஊடகத்திடம் பேசி உள்ளார். அப்போது அவர் கூறுகையில், "எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருப்பது முழுக்க முழுக்க எடப்பாடி அணியினரால் கொண்டாடப்பட வேண்டிய வெற்றி. இந்த தீர்மானத்தை ஏற்க மாட்டார்கள் என்று நினைத்தேன்.
ஆனால் கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒரு சோர்ஸ், தலையிட்டு வரவச்சிருக்குன்னு நான் நம்புறேன். இது எடப்பாடி பழனிசாமியின் சாதூர்யத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரம் தான். 2024 தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதமாக இருக்கும். அதேநேரம் சிவில் கோர்டில் தீர்ப்பு பாதகமாக வந்தால், தேர்தல் ஆணையத்தின் முடிவு மாறிவிடும்.
உயர்நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ எடப்பாடி பழனிசாமியை முழுமையாக அங்கீகரித்து தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிசாமிக்கு தொல்லைகள் இருக்கத்தான் செய்யும் என்றார். தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்திருப்பது, ஓபிஎஸ்க்கு மிகமிக மிகப்பெரிய தோல்வி. ஓபிஎஸ் தரப்பு எந்த வாதத்தை வேண்டுமானாலும் கோர்டில் இது தொடர்பாக வைக்கலாம். ஆனால் அதை அங்கீகரித்து தீர்ப்பாக மாறுகிறதா என்பதை பார்க்க வேண்டும் " இவ்வாறு மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி கூறினார்.












Click it and Unblock the Notifications