அதிமுக மா.செ மீது வந்த புகார்! இரவோடு இரவாக கட்சியை விட்டே நீக்கிய எடப்பாடி! யாரை தெரியுமா? ட்விஸ்ட்
சென்னை: மக்களவை தேர்தலில் விழுப்புரத்தில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக கூறி ரூ. 1.60 கோடி வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது, அதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் கிருஷ்ணன் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அதிமுக மா.செ மீது புகார் அளித்த நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக இளைஞரணி செயலாளராக செயல்பட்டு வந்தவர் கிருஷ்ணன். இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த மக்களவை தேர்தலின் போது விழுப்புரம் தொகுதியில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக கூறி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு தன்னிடம் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாகவும், ஆனால் சொன்னபடி சீட் வாங்கித் தரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பணத்தை திருப்பி கேட்ட போது, லோக்சபா தேர்தலில் தான் தோல்வியடைந்ததால் பணத்தை பின்னர் தருவதாக குமரகுரு கூறினார். இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தேன். இருந்த போதும் உரிய நடவடிக்கை இல்லை என கூறியுள்ளார். மேலும், பணத்தை திருப்பி கேட்டதால் மாவட்ட செயலாளர் குமரகுரு தன்னை தாக்கியதாகவும் மேலும் அதிமுக தலைமையிடத்தில் புகார் தெரிவித்ததால் பணம் தர முடியாது என மிரட்டுகிறார் எனத் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி ரூபாய் 65 லட்சம், மார்ச் 1 ஆம் தேதி 50 லட்சம், மார்ச் 6 ஆம் தேதி 45 லட்சம் என மொத்தமாக ரூபாய் 1.60 கோடி கொடுத்துள்ளேன், அந்தப் பணத்தை பெற்றுத் தர வேண்டும் என்றும் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார் கிருஷ்ணன்.
மேலும், தனக்கோ தனது குடும்பத்தினருக்கோ ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் குமரகுரு மற்றும் அவரது மகன் சதீஷ் (எ) நமச்சிவாயம் ஆகியோர் தான் பொறுப்பாவார்கள் என கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
இந்தநிலையில், கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது போலீசில் புகார் அளித்த அதிமுக நிர்வாகி கிருஷ்ணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுக நிர்வாகிகள் கிருஷ்ணன் மற்றும் அரசூர் சிவா ஆகியோரை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்
கள்ளக்குறிச்சி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் M. கிருஷ்ணன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அரசூர் சிவா (எ) N. சிவக்குமார், ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications