இன்னும் 28 அமாவாசைகள் தான் இருக்கு! அதிகாரம் நிரந்தரமல்ல! திமுக மீது எடப்பாடி பழனிசாமி பாய்ச்சல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்னும் 28 அமாவாசைகள் மட்டுமே திமுக அரசு ஆட்சியில் இருக்கும் என்றும் அதிகாரம் நிரந்தரமானது என்ற எண்ணம் வேண்டாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம் காட்டியுள்ளார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்ததை கண்டித்து அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

''மக்கள் பிரதிநிதிகள் மீதே பொய் வழக்கு பதிவு செய்யும் விடியா திமுக அரசின் ஏவல் துறைக்கு கடும் கண்டனம். தமிழ்நாட்டில் தற்போது நடப்பது மக்களாட்சியா ? அல்லது கொடுங்கோலன் ஜார் மன்னன் ஆட்சியா ? என்று தெரியாமல் மக்கள் தவிக்கும் நிலை, பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நிர்வாகத் திறமையற்ற செயல்பாடுகளால் ஏற்பட்டுள்ளது வேதனைக்குரியது.''

Edappadi Palaniswami said that the DMK govt will be in power for only 28 Amavasai, and should not think that power is permanent

''தமிழகமே தங்களுக்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டது போல், பல்வேறு அடாவடித்தனங்களில் தி.மு.க. நிர்வாகிகளுடன் இணைந்து ஒருசில கொத்தடிமை அதிகாரிகளும் திமுக நிர்வாகிகளாகவே நடந்துகொள்வது கேவலத்தின் உச்சம். கழக அமைப்புச் செயலாளரும், மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், A.K. செல்வராஜ், கடந்த 23.1.2024 அன்று மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளரிடம் தொலைபேசி
வாயிலாக உரிய முன் அனுமதி பெற்று, தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில இருந்து, கான்கிரீட் சாலை அமைக்க மதிப்பீடு வழங்கக் கோரி பல நாட்கள் ஆன நிலையில், இன்னும் நகராட்சி நிர்வாகம் மதிப்பீடு வழங்காததால், அப்பகுதி மக்களுக்கு பதில் அளிக்க முடியவில்லை என்றும், எனவே உடனடியாக கான்கிரீட் சாலை அமைப்பதற்கான மதிப்பீட்டினை வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.''

''மேலும், தனது உறுப்பினர் நிதியில் இருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்துப் பணிகளையும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் மேற்கொள்ளும்படி நகராட்சி ஆணையாளரிடம் கோரி இருக்கிறார். A.K. செல்வராஜ் நகராட்சி ஆணையருடன் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, மேட்டுப்பாளையம் திமுக நகர மன்றத் தலைவர், துணைத் தலைவர், திமுக நகர மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என 30க்கும் மேற்பட்டோர் நகராட்சி ஆணையர் அறையில் வேண்டுமென்றே நுழைந்து, எப்படி எதிர்க்கட்சியைச் சேர்ந்த மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகர மன்ற வார்டு உறுப்பினர்களுடன் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் கலந்துரையாடலாம் என்று தேவையில்லாமல் பிரச்சனை செய்துள்ளனர்.''

''ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனத்தின் உச்சமாக மக்கள் நலப் பணிகளை துவக்கக் கோரிய சட்டமன்ற உறுப்பினர் பேரிலும், அவருடன் சென்ற நகராட்சிக் கவுன்சிலர்கள், நகரச் செயலாளர், மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் உள்ளிட்ட 20 பேர்கள் மீதும், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட சுமார் 30 நகராட்சி அலுவலர்களிடம் கையெழுத்து வாங்கி பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது.''

''இந்தப் பொய் வழக்கில் குற்ற எண். 51/2024-ன்கீழ், பெண்களை தொந்தரவு செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விடியா திமுக மோசடி அரசின் ஏவல் துறையாக விளங்கும் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற அடக்குமுறையை ஏவி விடுவதன் மூலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரை முடக்கிவிடலாம் என்று மனப்பால் குடிக்கும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் ஏமாற்றத்தைத்தான் சந்திப்பார்.''

''சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், முதலமைச்சர் முதல் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் வரை, பொதுச் செயலாளர் முதல் கடைக்கோடி தொண்டர்கள் வரை அதிகாரிகளிடம், அதுவும் குறிப்பாக பெண் அதிகாரிகளிடம் எப்படி பேசுவார்கள் என்பதை அனைத்து அதிகாரிகளும், பொதுமக்களும் நன்கு அறிவார்கள். கழக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகளிடம் ஆண், பெண் பாகுபாடு பாராமல், அதிகாரி என்ற முறையில்தான் பேசுவார்களே தவிர வேறு முறையில் அல்ல.''

''பொதுவெளியில் பெண் காவலரிடம் வரம்புமீறி நடந்துகொண்ட விருகம்பாக்கம் திமுக நிர்வாகி மீது இதுவரை காவல்துறை FIR-க்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மணப்பாறை மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரிகள், JCB இயந்திரங்களை அமைச்சர் பெயரைச் சொல்லி காவலர்களிடமிருந்து அடாவடியாக மீட்டுச் சென்ற திமுக பிரமுகர், திருச்சியில் காவல் நிலையத்திலேயே பெண் காவலர் தாக்கப்பட்ட நிகழ்வுகள் என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம் இவற்றின் மீதெல்லாம் காவல் துறையினரின் நடவடிக்கை ஏதும் இல்லை. இதுதான் திமுக-வினர் பெண் காவலர்களுக்குத் தரும் மரியாதை. சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்களிடம் நேரடியாக பணம் கேட்ட திமுக நிர்வாகியின் உரையாடல் அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டது.''

''அதே நேரம், நடுநிலையோடு செயல்பட வேண்டிய காவல் துறை, ஆளும் திமுக-வினரின் பேச்சைக் கேட்டு, பொய் வழக்குகள் போட்டு எதிர்க்கட்சி நிர்வாகிகளை முடக்கிவிடலாம் என்ற இருமாப்பில் செயல்படுவது அழகல்ல. இந்த ஆட்சியாளர்களால் காழ்ப்புணர்ச்சியோடு புனையப்படும் வழக்குகளை சட்ட ரீதியாக சந்திக்கும் திறன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு.''

''அதிகாரம் நிரந்தரமானது என்ற நினைப்புடன் திமுக-வினரின் சொல்படி செயல்படக்கூடிய ஒருசில அரசு அதிகாரிகள் மற்றும் ஒருசில காவல் துறையினர், சட்டப்படி இன்னும் 28 அமாவாசைகள் மட்டுமே விடியா தி.மு.க. அரசு ஆட்சியில் இருக்கும் என்பதைக் கருத்திற்கொண்டு நியாயமாக, சட்டத்தின்பால் நேர்மையாக பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிடில், அதற்கான விலையை அவர்கள் கொடுத்தே தீர வேண்டும் என்று எச்சரிக்கிறேன்.''

''இருமுறை சட்டமன்ற உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மாநில அமைச்சர் என்று பல பொறுப்புகளை வகித்த, மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. A.K. செல்வராஜ் மற்றும் நகராட்சிக் கவுன்சிலர்கள் உள்ளிட்ட 20 பேர் மீது பொய் புகார் கொடுத்த மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி ஊழியர்களைக் கண்டித்தும், அப்புகாரை தீர விசாரிக்காமல் உடனடியாக பொய் வழக்கு பதிந்த மேட்டுப்பாளையம் காவல் துறையினரைக் கண்டித்தும், கழகத்தின் சார்பில் மேட்டுப்பாளையத்தில் விரைவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+