மைத்ரேயன் நீக்கம் குறித்த கேள்வி.. உட்கட்சி விவகாரத்தை நீங்கள் கேட்கக் கூடாது.. டென்ஷனான எடப்பாடி
திருப்பத்தூர்: தேர்தலுக்கு இன்னும் 8 மாதகாலம் உள்ள நிலையில் பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும் என்றும், மைத்ரேயனை கட்சியில் இருந்து நீக்கியது உட்கட்சி விவகாரம். என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தான் தெரியும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூரில் அதிமுக பொதுச் செயலாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, அவர் பேசுகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் எழுச்சி பயணம் மேற்கொள்ளவுள்ளேன். விவசாயம், பள்ளிக் கல்வி, தனியார் பேருந்துகள் என 32 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவர்களது குறைகள் தொடர்பாக கோரிக்கைகளை தரிவித்தனர்.

அதிமுக ஆட்சி அமைந்ததும் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மாணவர் சேர்க்கை குறைந்ததால் 207 பள்ளிகள் மூடப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. திமுக அரசு பதவி ஏற்ற பின்னர் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தங்கம், வெள்ளி நிலவரம் பத்திரிகைகளில் வந்து கொண்டிருந்த நிலயில், தற்போது கொலை நிலவரம் குறித்த செய்திகள் வெளிவருகின்றன. இதற்கு காவல் துறையை அரசு சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காததே காரணம்.
இந்தியா மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு சர்வாதிகாரப்போக்கு. இன்றைக்கு எல்லா நாடுகளும் சரி சமமாக வரி விதித்து, அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். ஒவ்வொரு நாட்டில் ஒரு பொருட்கள் விளைவிக்கின்றனர். வேண்டுமென்று அதிக வரி விதித்து ஒரு நாட்டை அடிமைப்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்..
டிடிவி தினகரனும், நீங்களும் ஒரே மேடையில் இணைவார்கள் என்று நயினார் நாகேந்திரன் கூறியது குறித்த கேள்விக்கு, அதை அவரிடம் கேளுங்கள். அவர் தானே சொல்லி இருக்கிறார். பாஜக கூட்டணி எங்கிட்ட உண்டு. மற்றது எல்லாம் நாங்கள் தான் முடிவு செய்வோம். அதிமுக தான் தலைமை தாங்குகிறது. சந்தர்ப்ப சூழ்நிலை வரும் போது அதற்கான பதில் தரப்படும்.
மைத்ரேயனை கட்சியிலிருந்து நீக்கியது குறித்த கேள்விக்கு, மைத்ரேயனை கட்சியிலிருந்து நீக்கியது உட்கட்சி விவகாரம். என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தான் தெரியும். ஒவ்வொரு கட்சிக்கும் கட்டுப்பாடு உள்ளது. அதன் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுப்போம். அதனை வெளியே பேசுவது சரியாக இருக்காது. இது சுதந்திர நாடு. ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும், எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம். வேறு யாரும் மற்ற கட்சிக்குப் போகவில்லையா.
அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மீண்டும் சேர்த்தோம். பின்னர் மீண்டும் வேறு கட்சிக்குப் போனார். அதேபோல, மைத்ரேயன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மீண்டும் சேர்த்த நிலையில் மீண்டும் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார். இப்படிப்பட்டவர்கள் எந்தக் கட்சியிலும் நிலையாக இருக்க மாட்டார்கள்.
ஓபிஎஸ் பாஜ கூட்டணியில் சேர்ந்து உங்களுடன் இணைந்து செயல்படுவாரா என்ற கேள்விக்கு, அதெல்லாம் அவரைக் கேளுங்க. எங்களை ஏன் கேட்குறீங்க. எங்களைப் பொறுத்த வரை எந்த நேரத்தில் எதைப் பேச வேண்டுமோ அதைப் பேசுவோம். தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் உள்ளது. இந்த 8 மாத காலத்தில் அதிமுக, பாஜக கூட்டணி தலைமையை ஏற்று பல கட்சிகள் வந்து சேருவார்கள்.
விதிகளை மீறுவோர் கட்சியில் இருந்து அகற்றுவதும், மீண்டும் இணைப்பதும் தமிழக அரசியலில் புதிதில்லை அரசியல் கூட்டணிகள் குறித்து தேர்தல் நேரத்தில் மட்டுமே பதில் அளிக்க முடியும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications