“விஜய் உடன் பேசல.. தவெக தொண்டர்கள் என் கூட்டத்தில் ஆர்வத்தோடு பங்கேற்கின்றனர்” - எடப்பாடி பழனிசாமி
சென்னை: "தவெக தொண்டர்கள் என் கூட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். கட்சித் தலைமையின் அனுமதி பெற்று வர தவெகவினருக்கு அறிவுறுத்தியுள்ளோம். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகுதான் கூட்டணி இறுதியாகும்" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், பெரிய சோரகை பகுதியில் அமைந்துள்ள சென்றாயப் பெருமாள் கோயிலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்வது வழக்கம். குறிப்பாக தேர்தல் நேரங்களில் பிரசாரம் தொடங்குவதற்கு முன்பு இந்த கோயிலில் தரிசனம் செய்துவிட்டுதான் பிரச்சாரத்தையே தொடங்குவார் எடப்பாடி பழனிசாமி.

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இன்று காலை பெரிய சோரகை சென்றாயப் பெருமாள் கோயில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து மேட்டூர் அணை நூறு ஏழு திட்டத்தில் வரும் நங்கவள்ளி பகுதியில் அமைந்துள்ள வைரனேரி மற்றும் சூரப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள வாத்துப்பட்டி ஏரியை பார்வையிட்டு விவசாயிகளைச் சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "தவெக தொண்டர்கள் என் கூட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். கட்சித் தலைமையின் அனுமதி பெற்று வர தவெகவினருக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவர்கள் ஆர்வத்தோடு வருகிறார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும் கூட கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம்" எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டத்துக்கு தவெகவினர் வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் சிலர் விமர்சனம் செய்கின்றனர். பாஜக உடன் நாங்கள் கூட்டணி அமைத்த நாள் முதலே பொறுக்க முடியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் அவர்களுக்கு என்ன? திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு எல்லாம் எங்களைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதிமுகவுடன் தவெக கூட்டணி சேர்ந்துவிட்டால் பாஜகவை எடப்பாடி பழனிசாமி கழற்றி விட்டுவிடுவார் என்ற டிடிவி தினகரன் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி,
"டிடிவி தினகரன் நடத்துவதெல்லாம் ஒரு கட்சியா? யாரும் அவரை ஆதரிக்காததால் இப்படி பேசுகிறார். இதெல்லாம் ஒரு கேள்வி என்று கேக்கலாமா? யார் யாரோ பேசுவதை எல்லாம் பற்றி கேட்காதீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தவெக தலைவர் விஜய் உடன் தொலைபேசியில் பேசினீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "தவெக தலைவர் விஜய் உடன் பேசவில்லை. நாங்கள் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து ஆறுதல் தெரிவித்தோம். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும் கூட கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகுதான் கூட்டணி இறுதியாகும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications