போன உசுரு வருமா? மனசாட்சி கொஞ்சமாவது இருந்தா ஸ்டாலின் ராஜினாமா செய்யணும்: பொங்கிய எடப்பாடி பழனிசாமி!
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு முழு பொறுப்பு ஸ்டாலின் தான், மனசாட்சி என்பது கொஞ்சமாவது இருந்தால் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி.
தமிழக சட்டப்பேரவைக்கு இன்று அதிமுக, பாமக எம்எல்ஏக்கள் கருப்பு நிற உடையணிந்து வந்திருந்தனர். கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சியில் 51 பேர் பலியான சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். சட்டசபை தொடங்கியதும் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் கோரினர். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அதிமுக எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று கூறி பதாகைகளை ஏந்தி சபாநாயகர் இருக்கை முன்பு கோஷமிட்டனர்.

சட்டசபையில்: இதையடுத்து சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்பட அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து பாஜக, பாமக எம்எல்ஏக்களும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து சட்டசபையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் மீது முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவுற்றதும் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றிப் பேசப்படும் என்பதை அறிந்தே, வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னவர்களுக்கு எங்கும் ஓடி ஒளியாமல் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளேன் என ஸ்டாலின் தெரிவித்தார். அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பதிலடி: இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்த விவாதம் நடத்தக்கோரி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் முழக்கமிட்டபோது அவையில் இல்லாமல் ஒளிந்துகொண்டிருந்த ஸ்டாலின், பேரவைத் தலைவர் எங்களை வலுக்கட்டாயமாக அராஜகப் போக்குடன் வெளியேற்றிய பிறகு வந்து, தான் "ஜனநாயக மாண்பு காப்பாளர்" என்று ஒரு நாடகமாடி, கள்ளச்சாராய மரணங்கள் குறித்த முற்றிலும் ஏற்கத்தகாத ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.
அஇஅதிமுகவினர் சபையில் இல்லாதபோது வந்து, தான் ஓடி ஒளியவில்லை என்று திமுக முதல்வர் சொல்வது நகைப்புக்குரியது. சென்ற ஆண்டு செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 23 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த பிறகாவது, இந்த திமுக அரசு கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று கள்ளக்குறிச்சியில் இச்சோகம் நிகழ்ந்திருக்காது. எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு முழு பொறுப்பு ஸ்டாலின் தான்.
மனசாட்சி இருந்தால்: மூன்றாண்டுகள் கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, இப்போது வந்து "நான் அதிகாரிகளை மாற்றிவிட்டேன்" என்று சொல்வது பொறுப்பற்றத் தன்மையின் உச்சம். மக்கள் நலன் ஒன்றே அதிமுகவின் அரசியல் ஆதாயம். அந்த ஆதாயம் நிறைவேற நாங்கள் அனைத்து ஜனநாயக வழிகளிலும் போராடுவோம். 18.02.2017 அன்று நீங்கள் சட்டப்பேரவையில் அரங்கேற்றிய அராஜகம், தமிழ்நாடு சட்டப்பேரவை கண்டிராத ஜனநாயகப் படுகொலை.

ஜனநாயக மாண்பைப் பற்றி பேச திமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை. நீங்கள் அதிகாரிகளை மாற்றவே 50 உயிர்கள் பலியாக வேண்டுமா? இப்போது நீங்கள் வாசிக்கும் பட்டியலால் போன 50 உயிர்கள் மீண்டும் வந்துவிடுமா? மனசாட்சி என்பது கொஞ்சமும் இருந்தால் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications