திண்டுக்கல் மலையில் தீவிரவாதி?இப்போதாவது இரும்பு கரத்தை எடுங்க ஸ்டாலின்! எடப்பாடி பழனிசாமி சுளீர்..!
சென்னை: திண்டுக்கல்லில் மலைப் பகுதியில் டெட்டனேட்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பயங்கரவாதம் தலைதூக்கும் அளவுக்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதாக விமர்சித்திருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி.
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை மலை உச்சிப் பகுதிக்கு செல்லும் மலைப் பாதையில் 17-வது கொண்டை ஊசி வளைவு அருகில் வனத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள Watch Tower உள்ளது. இதன் அருகே துர்நாற்றம் வீசியதால் மலைச்சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் வனத்துறைக்கும் திண்டுக்கல் தாலுகா காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் சிறுமலை வனத்துறையினர் மர்மமான முறையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் இருப்பதை பார்த்தனர். இதை அடுத்து அப்பகுதி முழுவதும் ஆய்வு செய்ததில் இறந்தவரின் உடல் அருகே பேட்டரி வயர்கள் கிடந்துள்ளது.
காவல்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், கியூ பிரிவு போலீசார், மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர். சம்பவ இடத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் நேரடியாக ஆய்வு செய்தார். மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் டெட்டனேட்டர் பயன்படுத்தும்போது ஏற்பட்ட விபத்தில் நபர் உயிரிழந்தது தெரியவந்தது.
இதனையடுத்து வழக்கின் விசாரணைக்காக பயங்கரவாத எதிர்ப்பு படை போலீசார் களத்துக்கு விரைந்தனர். பயங்கரவாத எதிர்ப்புப் படை எஸ்பி ரமேஷ் கிருஷ்ணா தலைமையில் ஆய்வாளர் ஐரின் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டார். விசாரணை மற்றும் சோதனையின் அடிப்படையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பயங்கரவாதம் தலைதூக்கும் அளவுக்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதாக விமர்சித்திருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்மப்பொருள் வெடித்து ஒருவர் இறந்து உள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
NIA, ATS உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வரும் நிலையில், பேட்டரி வயர் மற்றும் வெடி பொருட்கள் உள்ளதால் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் நிலவுவதாக செய்திகள் வருகின்றன. ஏற்கனவே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சென்னையில் NIA-வால் கைது செய்யப்பட்ட நிலையில், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்ற நிலையைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவிற்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் காவல் துறையை தன்னகத்தே வைத்திருக்கும் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலினோ தினம் ஒரு வீடியோ சூட்டிங்கில் பிஸியாக உள்ளார். நாடக வீடியோக்கள் மீதான நாட்டத்தை குறைத்து கொண்டு, தமிழ்நாடும் நம் மக்களும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென்று உணர்வோடு, முதல்வர் அடிக்கடி சொல்லி காட்டுகின்ற அந்த இரும்புக்கரத்தை இப்போதாவது பயன்படுத்தி செயல்பட வேண்டும்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications