திமுக தேர்தல் வாக்குறுதிகள் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ய அதிமுக வியூகம்!
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து வாக்காளர்களிடம் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ய அதிமுக வியூகம் வகுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்துவிட்டது. இந்த 9 மாவட்டங்களில் தேர்தல் பிரசாரமும் களைகட்டி வருகிறது.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்களில் வடமாவட்டங்களில் வருகின்றன. அதிமுக அணியில் பாமக இருந்திருந்தால் அதிக இடங்களைக் கைப்பற்றவும் வாய்ப்பிருந்தது.

பாமக தனித்து போட்டி
ஆனால் அதிமுக அணியில் இருந்து பாமக விலகி தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்துவிட்டது. பாமக தலைமையின் இந்த அறிவிப்புக்கு அக்கட்சிக்குள் கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. இதனால் பாமக மூத்த நிர்வாகிகள் பலரும் கட்சியை விட்டு விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
பாமகவினரின் வருகையை அதிமுக உற்சாகமாக எடுத்துக் கொண்டிருக்கிறது. அத்துடன் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களிலும் தேர்தல் சுற்றுப் பிரச்சார பயணத்தை மேற்கொள்கிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த பிரசாரத்துக்கு முன்னதாக, 9 மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடமும் தேர்தல் பொறுப்பாளர்களிடமும் ஆலோசனை நடத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

பிரசார வியூகம்
இந்த ஆலோசனையில், திமுக அரசு கொடுத்துள்ள முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததைதான் மக்களிடம் முன் வைத்து பிரச்சாரம் செய்ய வேண்டும். பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஆட்சியை பிடித்த திமுகவினர் இனியும் உங்களுக்கு நல்லது செய்யமாட்டார்கள். நீங்கள் ஏமாந்தது போதும். இனியும் ஏமாறாதீர்கள். உங்களை ஏமாற்றிய திமுகவுக்கு இந்த தேர்தலில் பாடம் புகட்டுங்கள் என்ற ரீதியில் மக்களிடம் பிரச்சாரம் செய்யுங்கள். அதிருப்தியில் இருக்கும் ஏழைகளிடமும் பெண்களிடமும் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அட்வைஸ் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

திமுக நிலைப்பாடு
திமுக மீது கிராமப் புற ஏழைகள் அதிருப்த்தியில் இருப்பதாகவே பல தகவல்கள் சொல்கின்றன. கள நிலவரம் சொல்வதும் இதுதான் என திமுக தலைமைக்கு சொல்லப்பட்டுள்ளதாம். ஆனால் ஆட்சி அதிகாரம், பண விநியோகம், முக்கிய கட்சிகள் தனித்து போட்டி ஆகியவற்றால் வாக்குகள் சிதறும். இது திமுகவை எளிதாக ஜெயிக்க வைக்கும் என அக்கட்சி கருதுகிறது. கள நிலவரமா? திமுகவின் வியூகமா? என்கிற நிலையில், மக்களின் அதிருப்தியை தூண்டிவிடும்படியாக அதிமுகவின் பிரச்சார வியூகம் இருக்கப் போகிறது என்கிறார்கள் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications