ஜெ., நினைவிடத்தில் மனம் உருகி.. கண்ணீர் மல்க வேண்டிய எடப்பாடி பழனிச்சாமி
ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி கண்ணீர் மல்க மனம் உருகி வேண்டிக்கொண்டார்
சென்னை: அதிமுக தொண்டர்களுக்கு ஜெயலலிதா நினைவிடம்தான் கோவில். எந்த ஒரு சம்பவம் என்றாலும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று வணங்கி ஆசி பெறுவது வழக்கம். இன்றைய தினம் மிகவும் முக்கியமான சம்பவம் ஒன்று அதிமுக அலுவலகத்தில் அரங்கேறியுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி கண்ணீர் மல்க மனம் உருகி ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களில் சில மிக முக்கியமான தீர்மானங்கள் இருக்கின்றன. தீர்மானம் 3ல், கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பு உருவாக்கப்படுதல். எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் அறிவிப்பு, தேர்தல் அதிகாரிகளை நியமித்தல். ஒற்றைத் தலைமை தேவை ஆகியன கட்சி சார்ந்த முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
4 மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுவிட்டனர். பொதுக்குழு கூட்டத்தில் தலைவர்கள் பேசும் போது ஓபிஎஸ்ஸை கட்சியிலிருந்தே நீக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. மேடையிலேயே சில வாக்குவாதங்களும் இது தொடர்பாக நடந்தன.
இதனைத் தொடர்ந்து அதிமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் நந்தம் விஸ்வநாதன் கொண்டு வந்தார். இந்தத் தீர்மானத்தை பொள்ளாச்சி ஜெயராமன் முன்மொழிந்தார். இந்த சிறப்புத் தீர்மானம் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து ஒற்றைத்தலைமையாக உருவெடுத்துள்ளார். பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக அதை ஏற்றுக்கொண்டு தீர்மானத்தை வழிமொழிந்துள்ளனர். இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
அப்போது கே.பி. முனுசாமி, தமிழ் மகன் உசேன், பா. வளர்மதி, செங்கோட்டையன் உள்ளிட்ட பல தலைவர்களும் உடன் இருந்தனர். ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி கண்ணீர் மல்க மனம் உருகி அஞ்சலி செலுத்தினார். அப்போது உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. கூடியிருந்த தொண்டர்கள் அனைவரும் இடைக்கால பொதுச்செயலாளர் வாழ்க என்று உற்சாக முழக்கமிட்டனர்.












Click it and Unblock the Notifications