Exclusive: அமித்ஷா சந்திப்புக்காக டெல்லியில் பல மணிநேரம் தவிப்புடன் காத்திருந்த எடப்பாடி பழனிசாமி?
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலில் நேரம் கொடுக்கப்படவில்லையாம்; டெல்லியில் பல மணிநேரம் தவிப்புடன் காத்திருந்த நிலையில் அதிமுகவின் பாஜக ஆதரவு தலைவர்கள் சிலரது அதிதீவிர முயற்சியால்தான் அமித்ஷாவை சந்திக்க நேரம் கிடைத்ததாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபை தேர்தலின் போதுதான் அதிமுகவின் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம் என தொடர்ந்து கூறிவந்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் நேற்று திடீரென எடப்பாடி பழனிசாமியும் அதிமுக மூத்த தலைவர்களும் டெல்லி சென்றனர்.

சட்டசபையில் போட்டுடைத்த ஸ்டாலின்
இது தொடர்பாக தமிழக சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார்; டெல்லியில் அவர் யாரை சந்திக்க இருக்கிறார் என்பதும் தெரியும் எனக் குறிப்பிட்டார்.
டெல்லியில் பல்டி பேட்டி
டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியோ, டெல்லியில் உள்ள அதிமுகவின் அலுவலகத்தை பார்வையிட மட்டுமே தான் வந்தேன்; இங்கே எந்த ஒரு முக்கியமான தலைவர்களையும் சந்திக்க வரவில்லை எனவும் விளக்கம் அளித்திருந்தார்.
சினிமா ஸ்டைலில் அமித்ஷாவை சந்தித்த இபிஎஸ்
ஆனால் நேற்று இரவு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சீனியர்கள் அடங்கிய குழு அமித்ஷாவை சந்தித்து பேசியது. இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. இதேபோல பாஜக தலைவர் ஜேபி நட்டாவையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அமித்ஷாவுடனான சந்திப்புக்காக சினிமா காட்சிகளையும் அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் வெவ்வேறு கார்களில் பயணித்தார் எடப்பாடி பழனிசாமி. அமித்ஷாவுடனான இந்த சந்திப்பைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவும் இடம் பெறுவது உறுதியாகிவிட்டது; மத்திய அமைச்சரவையிலும் அதிமுகவுக்கு இடம் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றன டெல்லி தகவல்கள்.
ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவுடன் அரசியலே பேசவில்லை; தமிழ்நாட்டுக்கான திட்டங்கள், நிதி உதவிகள் குறித்து பேசினோம்; தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மோசமாகிவிட்டது என்பதை விவரித்தோம். இதனைத்தவிர வேறு எதுவுமே பேசவில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
எடப்பாடி டீமை தவியாய் தவிக்க விட்ட பாஜக மேலிடம்
இது தொடர்பாக நாம் டெல்லி வட்டாரங்களில் விசாரித்த போது, அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து அரசியலே பேசவில்லை என்பதே ஒருவகையான அரசியல்தான். பாஜகவுடனான கூட்டணியில் இணைந்துவிட்டது என்பதாகவே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதிமுகவை தங்களது கட்டுப்பாட்டில்தான் வைக்க வேண்டும் என்பதில் பாஜக தெளிவாக இருக்கிறது. இதற்கு உதாரணமே டெல்லியில் நேற்று நடந்ததுதான். அமித்ஷாவை சந்தித்து கூட்டணிக்கு ஓகே சொல்லிவிட வேண்டும் என்ற முடிவோடுதான் அதிமுக தலைவர்கள் அனைவரும் டெல்லி வந்தனர்; ஆனால் டெல்லிக்கு வந்த பின்னரும் கூட அமித்ஷா தரப்பில் இருந்து எந்த ஒரு ஒப்புதலும் தரப்படவே இல்லையாம். இதனால்தான் டெல்லி செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியும் எந்த தலைவர்களையும் சந்திக்க வரவில்லை என பட்டும்படாமலும் கூறியிருந்தார். டெல்லியில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் அனைவரையும் பல மணிநேரம் அமித்ஷா தரப்பு தவிக்க விட்டிருக்கிறது. அமித்ஷாவுடன் சந்திப்பு இருக்குமா? இருக்காதா? என்கிற திரிசங்கு நிலையில்தான் தத்தளித்தனராம் அதிமுக தலைகள். அதிமுகவில் உள்ள பாஜகவுக்கு மிக நெருக்கமான சில தலைவர்கள்தான் முட்டி மோதி அமித்ஷா தரப்பில் நேரம் பெற்றுக் கொண்டு பின்னிரவில் சந்திக்க வைத்தார்களாம். டெல்லியில் அந்த பல மணிநேரமும் எடப்பாடி தரப்பு ரொம்பவே பரிதவித்தும் போனதாம்.. இதனைத்தான் பாஜக மேலிடமும் விரும்பி ரசித்தது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications