அமித் ஷா போட்ட போடு..எடப்பாடி தான் கூட்டணிக்கு தலைமை! அதிமுகவுக்கு தான் ஆட்சி! ஆர்பி உதயகுமார் உறுதி
மதுரை: 2026 ஆண்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் எனவும், எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சராக வருவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார். அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக மூத்த தலைவர் அமித் ஷா பேசியிருந்த நிலையில், ஆர்பி உதயகுமாரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் அதிமுக முன்னாள் அமைச்சரும், தமிழக எதிர்க் கட்சி துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்," திமுக ஆட்சிக்கு எப்போதெல்லாம் வருகிறதோ அப்பொழுதெல்லாம் மின்வெட்டு ஏற்படும்.
சட்ட ஒழுங்கு சீர்கெடும், விலைவாசி உயர்வு ஏற்படும் ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் நடைபெறும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டில், தனது தந்தை கருணாநிதி ஆட்சியைக் காட்டிலும் அதை மிஞ்சி ஸ்டாலின் சாதனை படைத்துள்ளார்.

தற்போதைய திமுக ஆட்சியின் ஐந்தாண்டுகள் தங்கள் வாழ்வில் மோசமான ஆண்டுகளாக தமிழக மக்களின் நினைவில் நிச்சயம் இருக்கும். ஏனென்றால் இதுவரை தமிழகத்தில் 7000 படுகொலை சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. இங்கும் கொலை, அங்கும் கொலை, எங்கும் கொலை என அப்பாவி மக்களை அச்சம் மிகுந்த குரல்கள் எல்லா இடங்களும் ஒலிக்கிறது. மக்களின் பயத்தை போக்கி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய ஸ்டாலின் திமுக அரசு ஆழ்ந்து உறங்குகிறது.
திரைப்படங்களில் காட்டுவதை விட அதிபயங்கரமான முறையில் கொலைகள் அரங்கேறி வருகின்றன, நாளுக்கு நாள் குற்றங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது, ஸ்டாலின் அரசின் நிர்வாக தோல்வியால் சட்ட ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளது. சமீபகாலமாக தனியாக வசிப்பவர்கள் குறிவைத்து கொலை செய்யப்படுகின்றனர் பல்லடம் மூவர் கொலை, ஈரோட்டில் இருவர் கொலை என எல்லா குற்றங்களையும் ஒரே கும்பல் தான் செய்கிறது என்றும், குற்றவாளிகளை கைது செய்து விட்டதாகவும் மக்கள் அச்சப்பட தேவை இல்லை என்றும் காவல்துறை அறிக்கை வெளியிடுகிறது.
ஆனால் அந்த ஈரம் காய்வதற்குள் மீண்டும் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த சாமியாத்தாள் என்ற முதிய வயது உடைய பெண்மணி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நம்மை நடுங்க வைக்கிறது. இன்றைக்கு வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று பொய் குற்றவாளிகளை கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வருகிறார்கள் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் தொடர்ந்து கூறி வருகிறார். தற்போது நடந்துள்ள ஒரே மாதிரியான கொலைகளுக்கு யார் காரணம்? ஏற்கனவே உள்ள இருப்பவர்கள் உண்மை குற்றவாளிகளா ? உருவாக்கப்பட்ட குற்றவாளிகளா? என்று பட்டிமன்றமே நடக்கிறது.
சமூகத்தில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பெண்களின் முன்னேற்றத்திற்கு இயங்கி வரும் தாம்பரத்தில் உள்ள அரசு சேவை இல்லத்தில் 13 வயது சிறுமியை அங்குள்ள காவலாளியே பாலியல் கொடுமை செய்து வேலியை பயிரை மேய்ந்த கதையாக உள்ளது. இந்த ஆட்சி மக்களுக்காக நடக்கிறதா? இல்லை குற்றவாளிகளாக நடக்கிறதா?
அண்ணா பல்கலைக்கழக மாணவி முதல் அரக்கோணம் மாணவி வரை திமுக நிர்வாகிகளால் நிகழும் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது .ஓய்வு பெற்ற எஸ்.ஐ. முதல் ஒன்றும் அறியாத குழந்தைகள் வரை குற்றவாளிகளால் தினமும் படுகொலை நடைபெறுகிறது .
இப்படி முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பற்ற முறையிலான ஆட்சியால் தமிழ்நாடே தடுமாறுகிறது. எடப்பாடி பழனிசாமி மக்களின் பாதுகாவலராக இருந்தார். ஆனால் இன்றைக்கு ஸ்டாலின் குற்றவாளிகளின் பாதுகாவலராக உள்ளார். தமிழகத்தை அதளபாதாளத்தில் தள்ளிய இந்த அரசு வீட்டுக்கு போக வேண்டும் என்று மக்கள் நினைத்து வருகிறார்கள்.
நிச்சயம் திமுக அரசு வீட்டுக்கு போகும் எடப்பாடியார் தலைமையிலான மிகப்பெரிய கூட்டணிக்கு வெற்றியை தர மக்கள் தயாராக இருக்கிறார்கள். இதில் எந்த குழப்பம் வேண்டாம் மக்களும் தெளிவாக இருக்கிறார்கள். இன்றைக்கு எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். 2026 ஆண்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் எனவும், எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சராக வருவார்" என்றார்.












Click it and Unblock the Notifications