"அண்ணாமலையை கட்டுப்படுத்தணும்".. அமித்ஷாவிடம், எடப்பாடி வைத்த மேஜர் டிமாண்ட்.. மாறும் தமிழக அரசியல்?
சென்னை: டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். இதன்மூலம் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது அண்ணாமலையின் செயல்பாட்டை தமிழகத்தில் குறைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அமித்ஷாவிடம் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் அதிமுகவும், பாஜகவும் ஒன்றாக கூட்டணியில் இருந்தன. 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தான் பாஜக எதிர்கொண்டது. ஆனால் தமிழகத்தில் கடந்த 2022ம் ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி பிளவுபட்டது. இரு கட்சிகளும் தனித்தனியே களம் கண்டன.
அதன்பிறகு கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக, பாஜக தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வியை தழுவின. மேலும் அதிமுக, பாஜக தலைவர்கள் இடையே கடும் உரசல் போக்கு இருந்தது. தமிழகத்தில் எலியும், பூனையுமாக அதிமுக - பாஜக மாறியது.

இருப்பினும் அதிமுகவில் ஒரு தரப்பினருக்கும், பாஜகவில் ஒரு தரப்பினருக்கும் இருகட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. இது தற்போது நடந்துள்ளது. அதாவது பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி வந்த நிலையில் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சந்தித்தனர். அப்போது எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவுக்கு சால்வை அணிவித்தார். இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. முதலில் அமித்ஷா, அதிமுக தலைவர்களுடன் உரையாடினார்.
அதன்பிறகு அமித்ஷாவும், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மட்டும் தனியாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு என்பது 15 நிமிடங்கள் வரை நடந்துள்ளது. இதில் முக்கிய விஷயங்கள் பற்றி இருவரும் விவாதித்துள்ளனர். குறிப்பாக கூட்டணிக்கான கண்டிஷன் பற்றி எடப்பாடி பழனிச்சாமி எடுத்துரைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி என்பது உறுதியாகி உள்ளது. இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணியாக போட்டியிட உள்ளனர்.
இந்நிலையில் தான் அமித்ஷாவிடம், எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி தொடர்பாக முன்வைத்த கண்டிஷன்கள் பற்றிய அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் அமையும் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை வகிக்கும். அதிமுக தலைமையிலான கூட்டணி என்று தான் அதனை சொல்வோம் என்று கூறியுள்ளார். அதேபோல் தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல் பாஜக கூட்டணியில் இப்போது உள்ள ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் உள்ளனர். அவர்கள் 2 பேர் பற்றியும், சசிகலா பற்றியும் எந்த கவலையும் இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
இந்த கூட்டணியின் ஒரே நோக்கம் என்பது திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதாக தான் இருக்க வேண்டும். பிற விவகாரங்களுக்கு இடமளிக்க கூடாது. கூட்டணிக்குள் எந்த காரணம் கொண்டும் விமர்சனங்களுக்கு இடமளிக்க கூடாது என்பன போன்ற விஷயங்களை எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷாவிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications