படிப்பு அவசியம்..பெண்கள் சொந்தக்காலில் நில்லுங்கள்..அப்பாவாக சொல்கிறேன் - முதல்வர் ஸ்டாலின் டச்
சென்னை: மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். உங்களின் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். பெண்கள் படிப்பதுடன் பொருளாதார ரீதியாக சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று தந்தையாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் பணி மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா என 163 நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். அதன் முதற்கட்டமாக சென்னை பெரம்பூர் ஜமாலியா பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்துவருகிறார். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிகுறிகளை வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து சென்னை டான் பாஸ்கோ பள்ளியில் நடைபெறும் பள்ளி மாணவர்களுக்கான மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 1,086 பேருக்கு இலவச மிதிவண்டிகளை வழங்குகிறார். தொடர்ந்து எஸ்.ஆர்.பி. கோவில் வடக்கு பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிடுகிறார். அதனை அடுத்து பேப்பர் மில்ஸ் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்துகிறார். இதனை அடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் கபாலீஸ்வரர் கலை மாறும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவர்கள் மாறும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் கல்வி உதவிதொகை வழங்கும் நிகழ்ச்சிகளிலும் முதல்வர் பங்கேற்றார்.

மு.க ஸ்டாலின்
மாணவர்கள் மத்தியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சொந்த தொகுதிக்கு வரும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த கல்லூரி குறுகிய காலத்தில் செல்வாக்கை அடைந்துள்ளது. ஏராளமான மாணவர்கள் நடப்பாண்டு படிக்க விண்ணப்பித்துள்ளனர். 5ல் ஒருவருக்ககு மட்டுமே படிக்க இடம் அளிக்க முடியும். இதற்குக் காரணமான அறநிலையத்துறை, கல்லூரியின் முதல்வர் பேராசியர்களை நான் பாராட்டுகிறேன்.

இலவசக்கல்வி
இரண்டாம் ஆண்டு இன்று முதல் தொடங்குகிறது. இதனைத் தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
முதலாம் ஆண்டு தேர்ச்சி பெற்று இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் கல்விக் கட்டணம் இன்றி படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறிய உடன் மாணவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
கட்டணம் இல்லை என்று சொல்வதனால் நீங்கள் யாரும் குறைவாக மதிப்பிடக்கூடாது.

எது இலவசம்?
கல்வி என்பது அனைவருக்கும் எளிதாக கிடைக்க வேண்டும் என்ற உண்மையாக அக்கறையின் காரணமாக இந்த அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. இலவசம் வேறு.. நலத்திட்டங்கள் வேறு..என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக தற்போது நாட்டில் பெரிய விவாதமே நடந்து கொண்டுள்ளது. கல்விக்காகவும் மருத்துவத்திற்காகவும் செய்யும் செலவு இலவசம் ஆகாது. ஏனென்றால் அது அறிவு நலம் சார்ந்தது உடல் நலம் சார்ந்தது.

சமூக நலத்திட்டங்கள்
அறிவு நலம் சார்ந்தது கல்வி.. உடல் நலம் சார்ந்தது மருத்துவம். இரண்டிலும் போதுமான அளவிற்கு நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று இந்த அரசு நினைக்கிறது. கல்விக்காகவும் மருத்துவத்திற்காக பல நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் இலவசங்கள் அல்ல சமூக நலத்திட்டங்கள்.
ஏழை எளிய விளிம்பு நிலை மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு இவை நிறைவேற்றப்படுகிறது.

படிப்பில் கவனம் தேவை
இலவசங்கள் கூடாது என்று அறிவுரை சொல்வதற்கு இப்போது புதிதாக வந்திருக்கின்றனர். அது பற்றி நமக்கு கவலையில்லை. இதற்கு மேல் பேசினால் அது அரசியல் ஆகி விடும் எனவே அது பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். உங்களின் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரே ஒரு பட்டத்துடன் நிறுத்தி விட வேண்டாம். உயர்கல்வியை தொடருங்கள். பட்டம் பெற்ற பெண்கள் தகுதிக்கேற்ற பணிகளை தேர்வு செய்யுங்கள். பொருளாதார ரீதியாக சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று தந்தையாக கேட்டுக்கொள்கிறேன். இந்த தொகுதி எனது சொந்தத் தொகுதி. என்னை செல்லப்பிள்ளையாக கருதுகின்றனர். எனது தொகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications