பள்ளி, கல்லூரிகளில் கொத்து கொத்தாக கொரோனா! ஹூ வார்னிங்! ஸ்கூல் தேவையா? அன்பில் மகேஷ் பரிசீலிப்பாரா?
சென்னை: புதிய வகை ஓமிக்ரான் கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகள் விமான சேவையை நிறுத்தி விட்டன.. ஆனால் நம்மூரில் பள்ளி குழந்தைகள் அருகருகே அமர்த்தி வைக்கப்பட்டு பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டு வருகிறது. இது பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இஸ்ரேல், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்கு முழுமையாக தடை விதித்து விட்டன.
கடந்த வருடம் நோய் பரவல் ஆரம்பிக்கும் போது எப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதோ, அது போன்ற நடவடிக்கைகள் இப்போது எடுக்கப்பட்டுள்ளன என்பதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு காட்டுகிறது.

தியேட்டர்களில் படம் காட்டுகிறோம்
உலக சுகாதார ஆய்வு அமைப்பு, இது மிகவும் ஆபத்தான வைரஸ் என்றும், உலகின் சில பகுதிகளில் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் நேற்று அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு அறிவித்து விட்ட பிறகும் கூட நாம் இன்னும் பள்ளிகளை திறந்து மாணவர்களை பக்கத்தில் உட்கார வைத்து பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.. தியேட்டர்களில் அனைத்து இருக்கைகளிலும் ரசிகர்களை அமர வைத்து படம் காட்டிக் கொண்டிருக்கிறோம்.

தடுப்பூசி இல்லையே
நமது நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது . குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்படவில்லை . இப்படியான ஒரு சூழ்நிலையில், பள்ளிகளுக்கு சென்று பாடம் படிக்க வேண்டிய நிலையில் மாணவ, மாணவிகள் உள்ளனர். பள்ளிக்கூடத்துக்கு உள்ளே மட்டுமல்லாது, பஸ்கள் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போதும், மாணவ, மாணவிகள் கூட்டத்திற்கு நடுவே தான் செல்கிறார்கள். சுத்தமாக எந்த ஒரு தடுப்பும் இல்லாமல் நோய் பரவல் காலத்தில் அவர்கள் கடுமையான ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று பல பெற்றோர்கள் கூற ஆரம்பித்து இருக்கிறார்கள்.

கொரோனா கிளஸ்டர்கள்
இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கடந்த வாரம் வட கர்நாடக மாவட்டமான தார்வார் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 281 பேருக்கு கொரோனா நோய் பரவல் ஏற்பட்டது. மாணவர்கள் மூலமாக அவர்களின் பெற்றோர்களுக்கும் நோய்தொற்று பரவியிருக்கிறது. எந்த நிலையில் தெற்கு கர்நாடகாவின் ஹாசன் பகுதியில் உறைவிடப் பள்ளி ஒன்றில் 21 பேருக்கு நோய்த்தொற்று பரவியிருக்கிறது. இதில் 13 பேர் மாணவர்கள், பிறர், அங்கு பணியாற்றுபவர்கள். குழந்தைகளுக்கு நோய்த் தொற்று பரவாது என்ற பொது எண்ணத்தை பொய்யாக்கும் வகையில் இதுபோல ஒட்டுமொத்தமாக பரவியிருக்கிறது கொரோனா.

ஆன்லைன் கல்வி
மாணவர்கள் அங்கேயே தங்கி இருந்ததால் பெற்றோர்களுக்கு பரவவில்லை என்று தெரிகிறது . அல்லது பெற்றோர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இதில் யாருக்குமே அறிகுறி காட்டவில்லையாம். கர்நாடகாவில் அடுத்தடுத்த வாரங்களில் இரு பகுதிகளில் மாணவர்களிடையே இந்த அளவுக்கு நோய்த்தொற்று பரவி இருக்கிறது. இன்னொரு பக்கம் புதிய ஓமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது என்று, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து விட்டது. ஆனால் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிகளை மூடும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். நமது அண்டை மாநிலத்தில் நடைபெற்று வரும் அடுத்தடுத்த சம்பவங்களை நினைத்துப் பார்த்து, குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்காவது, பழையபடி வீட்டிலிருந்து கல்வி கற்கும் முறைக்கு மாற்ற வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுக்க தொடங்கியிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications