Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்வியில் எப்போதும் தமிழ்நாடு தான் டாப்! பல நூறு திட்டங்கள் வரலாம்.. விதை காமராஜர் போட்டது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காமராஜர் படித்தது ஆறாம் வகுப்புதான். அவரது குடும்ப வறுமை அதற்கு மேல் படிக்க அவரை அனுமதிக்கவில்லை. ஆனால், அவர்தான் தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றி எழுதினார். கல்விக்கண் திறந்த காமராஜர் என்ற சொற்றொடர் என்ன சாதாரணமானதா?

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களில் என்றென்றும் நினைவுகூரப்படும் பெருமைக்குரியவர் காமராஜர். 9 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்த காமராஜர் ஆற்றிய கல்விப் பணிகளே இன்றும் கூட அரசியல் தலைவர்கள் காமராஜர் ஆட்சியை அமைப்போம் எனச் சொல்வதற்குக் காரணம்.

Educational Reforms of Kamarajar: Role and Achievements of Kamaraj in Education

விதை காமராஜர் போட்டது: இப்போது திமுக, அதிமுக என மாறி மாறி தமிழ்நாட்டை ஆளும் திராவிடக் கட்சிகள் பள்ளிக்கல்வித்துறைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்துக்கு விதை போட்டது காமராஜர் தான். பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டம் முதல் சுமார் 16,000 பள்ளிகள் திறந்தது வரை காமராஜரின் மகத்தான சாதனைகள் யாராலும் மறக்கக்கூடியவை அல்ல.

காமராஜர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 1950-51 காலகட்டத்தில் கல்விக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 5 லட்சம் தான். அப்போதைய தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் வயதுடைய எல்லாக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கும் அளவுக்கு பள்ளிகளும் தமிழ்நாட்டில் கிடையாது, ஆசிரியர்களும் இல்லை.

அடுத்து 1954ல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த காமராஜர், அந்த நிலையை தலைகீழாக மாற்றினார். கல்வி கற்க தொலை தூரத்திற்குச் செல்ல வேண்டிய நிலையை தவிர்க்க, அதிகளவில் பள்ளிகளைத் திறக்கத் தொடங்கினார். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி என்பது காமராஜரின் முக்கியக் கொள்கையாக இருந்தது. பதினோராம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக் கல்வி என்பதையும் உறுதி செய்தார் காமராஜர். காமராஜர் 1957-1962 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 16,000-க்கும் மேற்பட்ட புதிய பள்ளிகளைத் திறந்தார்.

பிச்சை எடுத்தாவது சோறு போடுவேன்: ஒருநாள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, சாலையோரம் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம், பள்ளிக்கு செல்லவில்லையா என்று காமராஜர் கேட்டதற்கு, பள்ளிக்கூடத்துக்கு வந்தா சோறு போடுவீங்களா என்ற பையனின் எதிர்கேள்வியை கண்டு அதிர்ந்து போய், தீவிரமாக யோசித்துத்தான் இலவச மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார் காமராஜர்.

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் இலவசமாக மதிய உணவு போட வேண்டும் என்றால் அதிக நிதி தேவைப்படும், அரசுக்கு தேவையற்ற சுமை என்றெல்லாம் குரல்கள் எழுந்தாலும், பட்டினி கிடந்தால் எப்படி படிக்க வருவான்? மற்ற வேலைகளை விட இதுதான் முக்கியம், இந்த திட்டத்தை கொண்டு வர ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுக்கவும் தயார் எனத் தெரிவித்து இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தார் காமராஜர்.

மதிய உணவுத் திட்டத்தின் மூலம் பள்ளிகளில் குழந்தைகள் சேர்வதும், இடையிலேயே நின்றுவிடாமல் தொடர்ந்து பள்ளிக்கூடத்துக்கு வருவதும் அதிகரித்தது. லட்சக்கணக்கான குடும்பங்களில் கல்வி முதன்முறையாக நுழைந்தது. தான் படிக்காவிட்டாலும், இந்த தேசம் ஏழை, பணக்காரன் வித்தியாசம் இன்றி படிக்க வேண்டும் என்று நினைத்தவர் காமராஜர்.

மகத்தான திட்டம்: பள்ளிக்கூடம் போனால் நிச்சயம் சாப்பாடு உண்டு என்று மாணவர்களை எண்ண வைத்ததால், மாணவர்களின் வருகை நாளுக்கு நாள் பெருகியது. 1956ஆம் ஆண்டு மதிய உணவளிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது 12 லட்சத்து 5 ஆயிரம் மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் மதிய உணவருந்தினார்கள். 1962-63-ல் மதிய உணவுத் திட்டத்தில் மதிய உணவு அருந்திய மாணவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்து 65 ஆயிரமாக அதிகரித்தது.

Educational Reforms of Kamarajar: Role and Achievements of Kamaraj in Education

பிரிட்டிஷ் ஆட்சியின் போது கல்வி கற்றோர் சதவீதம் 7ஆக மட்டுமே இருந்தது. அதற்குச் சில ஆண்டுகள் கழித்து காமராஜர் ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது. காமராஜர் உண்டி கொடுத்து உயிர் கொடுத்த தலைவராக உயர்ந்து நின்றார். பின்னர் வந்த திமுக, அதிமுக அரசுகளும் இந்த திட்டத்தை மெருகேற்றி மாணவ்ர்களுக்கு சத்துணவு அளித்து கல்வி வளர்ச்சிக்குத் துணை நின்றன.

அடித்தளம் போட்ட காமராஜர்: தமிழ்நாட்டைப் பின்பற்றி இன்று பல மாநிலங்கள் மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. தற்போது முக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் காலைச் சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுவதில் இருந்தே, மதிய உணவுத் திட்டம் அன்றைக்கு எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளலாம். இந்தியாவிலேயே தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது என்றால் அதற்கு அடித்தளம் காமராஜர் போட்டது.

ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயில ஏதுவாக 234 தொகுதிகளிலும் இரவு நேர பாடசாலையை காமராஜர் பிறந்தநாளான ஜுலை 15ஆம் தேதி தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதே, இன்றளவும், கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு காமராஜர் எந்தளவுக்கு முன்னோடியாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+