பாஜக நடிகை குஷ்புவுக்கு 'துடைப்ப கட்டை' வெயிட்டிங்.. ஈழத் தமிழர்கள் மிரட்டல்- யாழ்ப்பாண பயணம் ரத்து!
சென்னை: இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ள பாடகர் ஹரிஹரன் இசை நிகழ்ச்சிக்கு நடிகை குஷ்பு வருகை தந்தால் 'துடைப்ப கட்டை' ஆசீர்வாதம் தருவோம் என ஈழத் தமிழர் அமைப்புகள் மிரட்டல் விடுத்திருந்தன.
இதனைத் தொடர்ந்து ஹரிஹரன் இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணியில் இருந்து நடிகை குஷ்பு நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கை யாழ்ப்பாணத்தில் அண்மையில் இசையமைப்பாளர் சந்தோஷ் சிவன் இசை நிகழ்ச்சியை நடத்தி இருந்தார். அவரைத் தொடர்ந்து பாடகர் ஹரிஹரன் இசை நிகழ்ச்சி, நட்சத்திர இரவு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். இலங்கை யாழ்ப்பாணத்தில் டிசம்பர் 21-ந் தேதி இந்த நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சியை பாஜக நடிகை குஷ்பு தொகுத்து வழங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என குஷ்பு முன்னர் விமர்சித்திருந்ததை முன்வைத்து அவர் யாழ்ப்பாணம் வருகை தர கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு ஈழத் தமிழர் அமைப்புகள் நடிகை குஷ்புவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன. யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த வடக்கு மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி. சுப்பிரமணியம் கூறியதாவது: ஈழத் தமிழர் விடுதலைக்குப் போராடியவர்களை பயங்கரவாதிகள் என நடிகை குஷ்பு தெரிவித்திருந்தார். இது வன்மையான கண்டனத்துக்குரியது. ஈழத் தமிழர்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகை குஷ்பு இலங்கை யாழ்ப்பாணம் வருகை தந்தால் துடைப்ப கட்டை ஆசீர்வாதம் வழங்குவோம் . இவ்வாறு எம்.வி.சுப்பிரமணியம் எச்சரித்திருந்தார்.
இதனிடையே ஹரிஹரன் இசை நிகழ்ச்சியை தொகுக்கும் பணியில் இருந்து நடிகை குஷ்பு நீக்கப்பட்டுவிட்டதாக இலங்கை ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. நடிகை குஷ்புவுக்கு பதில் தொகுப்பாளர் டிடி என்ற திவ்யஷர்னி, ஹரிஹரன் இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை டிடியும் உறுதி செய்திருக்கிறார். தாம் முதன் முதலில் இலங்கை செல்ல இருக்கிறேன்; ஹரிஹரன் இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனவும் டிடி தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications