முகம்மது நபிகள் பிறந்தநாள்.. மிலாது நபி கொண்டாட்டம்.. வாழ்த்துக்களை பறிமாறிய இஸ்லாமிய பெருமக்கள்
சென்னை: இறை தூதர் முகம்மது நபிகள் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு மிலாது நபி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய பெருமக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
முகம்மது நபிகள் அவர்கள் இஸ்லாமிய கொள்கைகளை மக்களிடம் அவருடைய எளிமையான போதனைகள் மூலம் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுசேர்த்த பெருமைக்கு உரியவர்.

இறை தூதரான முகம்மது நபியின் பிறந்த நாளையே மிலாது நபியாக கொண்டாடுகிறோம். முகம்மது நபி, கிபி 570 ம் ஆண்டு ரபி உல் அவல் மாதம் எனப்படும் இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதத்தின் 12 ம் நாளில் மக்கா நகரில் அவதரித்தார். இந்த நாளையே மிலாது நபியாக இஸ்லாமிய பெருமக்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு மிலாது நபி செப்டம்பர் 28 ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் முகம்மது நபியின் போதனைகளை போற்றும் விதமாக இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை வாசிப்பது மிக முக்கிய கடமையாக வைத்துள்ளனர். பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த நாளில் நோன்பு வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் உடைகளை தானமாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பொதுவாக இஸ்லாமிய பண்டிகைகள் அனைத்தும் பிறை தெரிவதன் அடிப்படையிலேயே கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மிலாடி நபிக்கான பிறை செப்டம்பர் 27 ம் தேதி மாலையே தென்பட்டது. அதனால் செப்டம்பர் 28 ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் செப்டம்பர் 28 ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இந்த நாளையே அரசு விடுமுறையாகவும் அறிவித்துள்ளனர். அதே சமயம் சவுதி அரேபியாவில் செப்டம்பர் 27 ம் தேதியே மிலாடி நபி கொண்டாடப்பட்டது.
இன்றைய தினம் வழக்கமான உற்சாகத்துடன் மிலாது நபி கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய பெருமக்கள் ஒருவருக்கொருவர் அன்புடன் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர். சிறப்பு கூட்டங்கள் நடைபெற்றது அப்போது இறைத்தூதர் முகமது நபியின் சிறப்புக்களை பற்றியும் அவரது போதனைகளைப் பற்றியும் பகிர்ந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications