அட கொடுமையே.. 5 மணி நேரமாக நடுரோட்டில் கிடந்த தாத்தாவின் சடலம்.. ஆம்புலன்ஸ் வர தாமதமா.. சென்னை ஷாக்!
5 மணி நேரமாக முதியவர் சடலம் விழுந்து கிடந்தது
சென்னை: டிபன் சாப்பிட தள்ளுவண்டி கடைக்கு வந்தார் அந்த தாத்தா.. திடீரென மயங்கி விழுந்து அப்படியே இறந்துவிட்டார்.. இதையடுத்து ஆம்புலன்ஸ் வராததால், தாத்தாவின் சடலம் ரோட்டிலேயே 5 மணி நேரம் விழுந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. தமிழகத்தின் தலைநகரில் அடுத்த கொடுமை நடந்துள்ளது.
கொரோனா அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே வருகிறது.. யார் அருகில் சென்றாலும் தொற்று வந்துவிடுமோ என்ற பீதியும் அளவுக்கு அதிகமாகவே உள்ளது... இதனாலேயே ஒருவருக்கு செய்யும் அடிப்படை உதவிகூட இல்லாமல் போய் வருகிறது.

அந்த வகையில் கடந்த வாரம் தமிழகத்தில் ஒரே நாளில் 2 சம்பவம் நடந்தது.. திருப்பூரில் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி வாசலில் ஒரு முதியவரின் சடலம் கிடந்தது.. ஆஸ்பத்திரி வாசலிலேயே விழுந்து கிடந்ததுதான் அதிர்ச்சியாக இருந்தது.
கிட்டத்தட்ட 4 மணி நேரமாக அந்த தாத்தாவின் வாயில் நுரை பொங்கி கிடந்தது.. இதை பார்த்து பொதுமக்கள் தகவல் சொல்லி உள்ளனர்.. ஆனால், ஆஸ்பத்திரி அங்கேயே இருந்தும் யாரும் ஊழியர்கள் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.. அதன்பிறகுதான் சடலத்தை கொண்டு சென்றுள்ளனர்.. இந்த தாத்தா யார் என்று தெரியவில்லை.. விசாரித்து வருவதாக சொல்லப்பட்டது.
அதேபோல, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு முதியவர் பிளாட்பாரத்தில் படுத்திருந்தார்... ரொம்ப நேரமாகியும் அவரிடம் அசைவே இல்லை.உடலில் ஒட்டுத் துணி கூட இல்லை.. நிர்வாணமாக ஒரு பெரியவர் படுத்து கிடப்பதை பார்த்ததும், அந்த பகுதி மக்கள் பெரியமேடு போலீசுக்கும் கார்ப்பரேஷனுக்கும் தகவல் சொன்னார்கள்.
ஆனால் யாருமே வரவில்லை.. போன் செய்து 5 மணி நேரமாகியும் யாரும் வராமல் முதியவரின் நிர்வாண சடலம் ரோட்டில் கிடந்தது. பிறகு 108 ஆம்புலன்ஸ் வந்தது.. ஊழியர்கள் அந்த பெரியவரை சோதித்தபோது, உயிர் எப்போதோ பிரிந்துவிட்டிருந்தது.. அவரும் யார் என்று தெரியவில்லை.. அதன்பிறகு உடலை கொண்டு சென்றனர்.
அதேபோல இப்போதும் ஒரு முதியவர் சென்னையில் அனாதையாக இறந்திருக்கிறார்.. கொருக்குப்பேட்டையில் நேற்று காலை 11 மணிக்கு ஒரு தள்ளுவண்டி கடையில் டிபன் சாப்பிட அந்த தாத்தா வந்துள்ளார்.. அப்போதுதான் திடீரென மயக்கம் போட்டு சுருண்டு கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதை பார்த்து பதறிய அங்கிருந்தோர், உடனடியாக கொருக்குப்பேட்டை போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்.
போலீசாரும் முதியவரின் உடலை கொண்டு செல்வதற்காக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.. ஆனால் ஆம்புலன்ஸ் வரவே இல்லை.. பல மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால், அங்கிருந்து நகர முடியாமல்,சடலத்துக்கு பக்கத்திலேயே போலீசார் காத்திருந்தனர்.
கடைசியில், ஒருவழியாக 5 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்திருக்கிறது.. அதன்பிறகே முதியவரின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்ய ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. இவரும் யார் என்ற விவரம் தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது.
முன்பு போல் என்றால் பரவாயில்லை, யார் விழுந்து கிடந்தாலும் பொதுமக்கள் விரைந்து சென்று தூக்கி கொண்டு ஆஸ்பத்திரி ஓடுவார்கள்.. இப்போது வைரஸ் தொற்றினால் ஆம்புலன்ஸ் வரும்வரை காத்திருக்க வேண்டி உள்ளது.. ஆம்புலன்ஸ் டிரைவர்களும் எந்நேரமும் பிஸியாக இருப்பதாலும், ஆம்புலன்சுக்கும் பற்றாக்குறை இருப்பதாலும் இப்படிப்பட்ட கொடுமைகள் நிகழ்ந்து வருகின்றன.. இதற்கும் அரசு ஏதாவது ஏற்பாடு செய்தால் நல்லா இருக்கும்!












Click it and Unblock the Notifications