சீமானுக்கு கிடைக்காத கரும்பு விவசாயி சின்னம் சுயேட்சைகளுக்கு வந்தது எப்படி? தேர்தல் ஆணையம் விளக்கம்
சென்னை: சுயேச்சை வேட்பாளர்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியினர் கடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்தனர். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. மாறாக விவசாயி சின்னம் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

கரும்பு விவசாயி சின்னத்தை பெற நீதிமன்றம் சீமான் போராடிய நிலையில், அவருக்கு மறுக்கப்பட்டு பாரதிய ஐக்கிய மக்கள் கட்சிக்கு அந்த சின்னம் ஒதுக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில், கரும்பு விவசாயி சின்னம் பெற்ற பாரதிய ஐக்கிய மக்கள் கட்சி தமிழ்நாட்டில் 17 தொகுதிகளில் போட்டியிட மனுத் தாக்கல் செய்தது. மற்ற தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்த ஆட்கள் கிடைக்காத காரணத்தால் அக்கட்சி போட்டியிடவில்லை.
அந்த வகையில், பாரதிய ஐக்கிய மக்கள் கட்சி போட்டியிடாத இடங்களில் கரும்பு விவசாயி சின்னம் சுயேட்சைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் போட்டியிடும் நிலையில், அங்கு மேலும் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 5 பேர் போட்டியிடுகின்றனர்.
நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக கோரி வந்த கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க முடியாது என மறுத்த தேர்தல் ஆணையம், தங்களுக்கு மைக் சின்னம் வழங்கிய நிலையில் ராமநாதபுரத்தில் சுயேட்சை வேட்பாளருக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது ஏன் என நாம் தமிழர் கட்சியினர் கொந்தளித்தனர்.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. "ஒரு சின்னம் Free Symbol பட்டியலில் இருக்கும் போது, அந்தச் சின்னம் அங்கீகரிக்கப்படாத மாநில கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும், அந்தக் கட்சி போட்டியிடாத தொகுதிகளில் எந்த சுயேச்சை வேட்பாளரும் அந்த சின்னத்தை கேட்க முடியும்" என சுயேச்சை வேட்பாளர்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications