தேர்தல் முடிவுகளை சந்தேகப்படாதீங்க.. வேட்பாளர்கள் இவிஎம் மிஷினை சோதனை செய்யலாம்: தேர்தல் ஆணையம் ஓகே
சென்னை: தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு வாக்குப் பதிவு தொடர்பான சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ள தேர்தலில் 2, 3, ஆவது இடம் பிடித்த வேட்பாளர்கள் விண்ணப்பிப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19 ஆம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், 39 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை ஜூன் 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தேர்தலில் வாக்குப் பதிவு நடந்த போதே பணிகளை கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையம் ஒரு தொகுதி ஒரு அதிகாரி என 39 ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமித்தது. இந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கைக்காக கூடுதலாக 19 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தேர்தல் தொடர்பாக கடந்த ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதன்படி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தலில் 2, 3, ஆவது இடம் பிடித்த வேட்பாளர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரத்தின் நினைவகம் அல்லது மைக்ரோ கன்ட்ரோலர் மற்றும் விவிபாட் இயந்திரத்தில் 5 சதவீதத்தை வேட்பாளர் அல்லது முகவர்களின் முன்னிலையில் இயந்திர தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலர்கள் மூலம் பரிசோதனை செய்யலாம்.
இயந்திரத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா, சீல் உடைக்கப்பட்டுள்ளதா என்பதையும் அறிந்து கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. அந்த வகையில் இத்தகைய பரிசோதனை பணிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிதான் பொறுப்பு. அவர் துணை தேர்தல் அதிகாரி ஒருவரை நியமித்துக் கொள்ளலாம்.
தேர்தலில் வெற்றி பெற்றவருக்கு அடுத்த இரு இடங்களில் உள்ள வேட்பாளர்கள், ஒரு சட்டசபை தொகுதிக்கு 5 சதவீத கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்குப் பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திரங்களை பரிசோதனை செய்ய விண்ணப்பிக்கலாம். இருவரும் விண்ணப்பித்தால் ஒருவருக்கு 2.5 சதவீதம் என்ற அடிப்படையில் பரிசோதனை செய்யப்படும்.
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம். இதற்கு வேட்பாளர்கள் ரூ 40 ஆயிரம் மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். கட்டுப்பாட்டு இயந்திரம், மின்னணு இயந்திரம், விவிபாட் இயந்திரத்தின் குறியீட்டு எண்ணை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் அடங்கிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications