பலநூறு கோடி செலவு.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை உடனே நிறுத்தணும்.. பாஜகவில் வந்த குரல்.. என்னாச்சு?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாகவும், குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்குவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம், பிரியாணி, குக்கர் உள்ளிட்ட பல்வேறு ப பரிசு பொருட்கள் ஓட்டுக்காக வழங்கப்படும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தான் தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் ‛‛பலநூறு கோடி செலவு செய்யப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும்'' என பாஜக தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏ இடைத்தேர்தல் வரும் 27 ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதியில் மீண்டும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.
காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த எம்எம்ஏவான திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்பட மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர்.

தீவிர பிரசாரம்
தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளதால் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைக்க திமுக, காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். தென்னரசுக்கு ஆதரவாக அதிமுகவினரும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவாக அந்தந்த கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏறக்குறைய அனைத்து அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் அங்குள்ளதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

குக்கர், பணம்பட்டுவாடா புகார்
இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்கள் தனியாக அடைத்து வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் பணம் பட்டுவாடா நடப்பதாகவும், பிரியாணி, மட்டன் சாப்பாடு வழங்குவதோடு, சுற்றுலா அழைத்து செல்வதாகவும் கூறப்படுகிறது. அதோடு குக்கர் உள்பட வீட்டுக்கு தேவையான பொருட்கள் ஓட்டுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஈரோடு கிழக்கு தேர்தலில் பணம்பட்டுவாடா நடப்பதாக கூறி ஏராளமானவர்கள் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். அதிமுக, தேமுதிக உள்பட பல கட்சியினர், அமைப்புகள் புகார் செய்துள்ளனர்.

தேமுதிக, புதிய தமிழகம்
இதில் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலைதளங்களில் எழுந்துள்ளன. நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை தேமுதிக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் புகார் அளித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப் பட்டுவாடா பயங்கரமாக நடைபெறுவதாகவும், அதனால் இடைத்தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்றும் தேமுதிக கோரிக்கை விடுத்துள்ளது. இன்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியும், இடைத்தேர்தலை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

பாஜகவில் வந்த குரல்
இதன் தொடர்ச்சியாக இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என பாஜகவில் இருந்தும் குரல் வந்துள்ளது. பாஜகவின் ஐடிவிங் மாநில தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛பல நூறு கோடி செலவு செய்யப்பட்டுள்ள ஈரோடு இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அந்த பதிவில் இந்திய தேர்தல் ஆணையத்தை ‛டேக்' செய்துள்ளார். இதுவரை பிற கட்சிகள் கூறி வந்த நிலையில் தற்போது பாஜக தரப்பில் இருந்தே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications