தவெக வேட்பாளரின் மச்சான் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.50 லட்சம் பறிமுதல்.. வாக்காளர்களுக்காக பதுக்கலா?
சென்னை: தவெக லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனின் மைத்துனர் வீட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூ.50 லட்சம் பணம் தேர்தல் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின்படி வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடத்தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் திமுக சார்பில் பாரிவள்ளல், அதிமுக சார்பில் லீமா ரோஸ் மார்ட்டின், தவெக சார்பில் கு.ப.கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் தர்மராஜன் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் காலங்களில் வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்க, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படும் சிறப்பு சோதனைக் குழுவான, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் ரொக்கம், தங்கம் மற்றும் சட்ட விரோதப் பொருட்களை அதிரடியாகப் பறிமுதல் செய்கின்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனின் மைத்துனர் நீலமேகம் வளவனூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், வட்டாட்சியரும் தேர்தல் அலுவலருமான தமிழ்ச்செல்வனுக்கு கிடைத்த தகவலின் பேரில், நீலமேகம் மற்றும் அவரது மகன் அரவிந்த் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அங்கிருந்து ரூபாய் 50 லட்சம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கு.ப.கிருஷ்ணன், தவெக சார்பில் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கப்பட்டதா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், 50 லட்சம் ரூபாய் பணத்தை வைத்துள்ளீர்கள் இதற்கான ஆவணம் இருக்கிறதா என்பது குறித்து எல்லாம் வருமான வரித்துறையினர் நீலமேகம் குடும்பத்தினரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததால் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications