ஓபிஎஸ் போட்ட கடைசி யார்க்கர்! அதுவும் ‘NO BALL’! ஒரே ஒரு வாய்ப்பு தான் இருக்கு? சாம்பியன் எடப்பாடி!
சென்னை : அதிமுக சட்ட விதிகளை திருத்த தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் நாளை பொதுக்குழுவில் எந்த தீர்மானம் நிறைவேற்றினாலும் கையெழுத்திட்டு அங்கீகரிக்க வேண்டிய நிர்பந்தம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.
Recommended Video
ஒற்றைத் தலைமை விவகாரம் பலகட்ட பிரச்சினைகள், பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகள், அறிக்கைகள் என தொடங்கி, நீதிமன்ற படிக்கட்டுகளில் நிறைவடைந்திருக்கிறது.
அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு, அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்களை நிறைவேற்றுவது, தீர்மானங்களை கொண்டு வரவும் தடை விதிக்க இயலாது என கூறியுள்ளது.
புலி வருகிறது கதையாக ஓபிஎஸ் எடுத்த அனைத்து அஸ்திரங்களும் புஸ்வானாகிப் போன நிலையில், அவர் கடைசியாய் நம்பியிருந்தது நீதிமன்றத்தை மட்டுமே. கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள், காவல்துறை என அனைத்து முயற்சிகளும் கைவிட்டுப் போன நிலையில், நீதிமன்ற தீர்ப்பும் வந்து சேர்ந்துள்ளது.

பொதுச்செயலாளர் எடப்பாடி
தீர்மானங்களை நிறைவேற்றவோ புதிய தீர்மானங்களை கொண்டு வரவும் தடை இல்லை சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்வாக எவ்வித தடையும் இல்லை என்ற நம்பிக்கையுடன், அவரது ஆதரவாளர்கள் நாளை பொதுச்செயலாளர் குறித்த தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என கூறியுள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு
தர்மயுத்தத்தின் போது செய்தியாளர்களை சந்தித்து தொடர்ந்து பேசி வந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போதும் முன்னதாகவே ஊடகங்களை சந்தித்து பேசி வந்தார். ஆனால் கடந்த முறை போலவே இந்த முறையும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இந்த முறை அவர் விட்டுத்தர மாட்டார் என அவரது தரப்பு ஆதரவாளர்கள் முழங்கி வந்த நிலையில், முதல்வர் வேட்பாளர் வாய்ப்பு, எதிர்கட்சி தலைவர் பதவியை விட்டுக் கொடுத்தது போல், தற்போதும் தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளார் என்றே கூற வேண்டும்.

கட்டாயத்தில் ஓபிஎஸ்
ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட்டால் தான் தீர்மானம் செல்லும் எனக் கூறப்பட்டாலும், அதிமுகவை பொறுத்தவரை பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது என்பது நீதிமன்றத்தில் உறுதியாக சொல்லப்பட்டுள்ளது. எனவே அதன்படி எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக பதவி ஏற்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள். இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமையாக நியமிக்கும் தீர்மானத்திற்கு கையெழுத்துப் போட்டே ஆகவேண்டிய கட்டாயம் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஏற்பட்டுள்ளது.

ஆதரவு வட்டம் அதிகம்
ஒற்றைத் தலைமை விவகாரம் இருந்தபோதே எடப்பாடி பழனிச்சாமிக்கே ஆதரவு வட்டம் அதிகமிருக்கிறது என்பதை உணர்ந்திருந்தார் ஓபிஎஸ். ஆனால் உடன் இருந்தவர்கள் கொடுத்த ஐடியாக்கள், கடைசி நேரத்தில் காலை வாரிவிட்ட மாவட்ட செயலாளர்கள், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.ராஜா, புகழேந்தி உள்ளிட்டோர் கொடுத்த நம்பிக்கையின் காரணமாகவே இறுதிவரை எப்படியாவது பொதுக்குழு கூட்டத்தை நிறுத்தி பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என இருந்தார் ஓபிஎஸ்.

எடப்பாடி தான் வெல்வார்
கடந்தமுறை எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தன்னை நிரூபிக்க வேண்டி சட்டமன்றத்தில் எதிர்கொண்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர் ஒபிஎஸ். தற்போது கட்சியின் பொதுச் செயலாளராக பெரும்பான்மையை நிரூபிக்க பொதுக்குழுவில் களமிறங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது அவருக்கு எதிராகவே இருக்கிறார் ஓபிஎஸ். இம்முறையும் எடப்பாடி தான் வெல்வார் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.












Click it and Unblock the Notifications