மின்சார கட்டணத்தில் தெரியாமல் வரும் சேரும் பில் என்ன? மறைமுக இபி சார்ஜ் மர்மம்? பலரும் அறியாத விஷயம்
சென்னை: மின்சார பில் கையில் வந்ததும் பல குடும்பங்களில் எழும் முதல் கேள்வி, "நாங்கள் இவ்வளவு மின்சாரத்தைப் பயன்படுத்தவே இல்லையே, அப்புறம் ஏன் இவ்வளவு பெரிய பில் வந்திருக்கிறது?" என்பதுதான்... மின்வாரியத்தின் மீது கோபப்படுவதும், மீட்டரில் ஏதாவது கோளாறு இருக்குமோ என்று சந்தேகப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், உண்மை என்னவென்றால், நாம் செலுத்தும் தொகையில் மின்சார பயன்பாட்டிற்கான கட்டணத்தைத் தாண்டி, பல நுணுக்கமான கூடுதல் கட்டணங்கள் மறைந்து கிடக்கின்றன. அது என்ன தெரியுமா?
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலான வீடுகளுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்யப்படுகிறது.. அந்த பில்லில் நாம் பயன்படுத்திய யூனிட்கள் மற்றும் அதற்கான அடிப்படைத் தொகை முதலில் காட்டப்படும். இதைத்தான் பெரும்பாலான மக்கள் கவனிப்பார்கள்.

மின் வரி - சேவை வரி
ஆனால், அதற்கு கீழே நிலைக்கட்டணம் அதாவது Fixed Charges என்ற ஒரு விஷயம் இருக்கும். இது உங்கள் மின் பயன்பாட்டை பொறுத்தது கிடையாது..
உங்கள் வீட்டிற்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பிற்கான ஒரு சேவை வரி போன்றது. நீங்கள் ஒரு மாதம் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றாலும், ஒரு யூனிட் கூட பயன்படுத்தவில்லை என்றாலும், உங்கள் இணைப்பிற்காக நிர்ணயிக்கப்பட்ட இந்த நிலைக்கட்டணத்தை நீங்கள் கட்டாயமாகச் செலுத்த வேண்டும்.
அடுத்ததாக, மின் வரி அதாவது Electricity Tax என்ற ஒரு பகுதி உண்டு. இது மின்சார வாரியத்திற்குச் செல்லும் தொகை அல்ல, நேரடியாக அரசாங்கத்திற்கு செல்லும் வரியாகும்.. இது உங்கள் மொத்தப் பயன்பாட்டுத் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாகக் கணக்கிடப்படுகிறது. பல நேரங்களில் பில் தொகை சட்டென உயர இதுவும் ஒரு மறைமுகக் காரணமாகிறது.
100 யூனிட் பயன்பாடு
இது தவிர, எரிபொருள் செலவு சரிசெய்யும் கட்டணம் அதாவது Fuel Price Adjustment என்ற ஒரு கூடுதல் சுமை அடிக்கடி சேர்க்கப்படும்.. மின்சாரம் தயாரிக்க பயன்படும் நிலக்கரி அல்லது எரிவாயுவின் விலை சர்வதேச சந்தையில் அதிகரிக்கும்போது, அந்த கூடுதல் செலவை நுகர்வோரிடமிருந்தே மின்வாரியம் வசூலிக்கிறது.
மேலும், பொதுமக்கள் அதிகம் கவனிக்க வேண்டியது அடுக்குமுறை கட்டணம் முறை அதாவது Slab Rate .. நீங்கள் 100 யூனிட்டிற்குள் பயன்படுத்தினால் ஒரு விலை, 200 யூனிட்டைக் கடந்தால் மற்றொரு விலை என மின்சாரத்தின் விலை யூனிட்டிற்கு யூனிட் எகிறும்.
உதாரணமாக, நீங்கள் 499 யூனிட் பயன்படுத்தும் போது வரும் பில்லுக்கும், 501 யூனிட் பயன்படுத்தும் போது வரும் பில்லுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். அந்த இரண்டு யூனிட்கள் உங்களை அடுத்த கட்டண அடுக்குக்குத் தள்ளிவிடும். இதனால் தான் பலருக்கு "கடந்த மாதத்தை விட இந்த மாதம் ஏன் இவ்வளவு அதிகமாக வந்தது?" என்ற சந்தேகம் எழுகிறது.
மின்சார வாரியம் - வரிக்கு வரி
மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பது ஒருபுறம் இருந்தாலும், உங்கள் பில்லில் உள்ள ஒவ்வொரு வரியையும் புரிந்து கொள்வது மிக அவசியம். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் விதிமுறைகளின்படி, இந்த ஒவ்வொரு கட்டணமும் முறைப்படிதான் கணக்கிடப்படுகின்றன.
எனவே, அடுத்த முறை பில் வரும்போது வெறும் மொத்தத் தொகையை மட்டும் பார்த்துவிட்டுப் பதற்றமடையாமல், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விரிவான பட்டியலைப் படியுங்கள். மின்சார மீட்டரில் ஓடும் எண்களைப் போலவே, பில்லில் உள்ள இந்த வரிகளும் உங்கள் பணப்பையைத் தீர்மானிக்கின்றன என்பதை உணர்ந்தால், தேவையற்ற மன உளைச்சலைத் தவிர்க்கலாம்...!!!












Click it and Unblock the Notifications