இரவு நேரத்தில் சென்னை மக்களை அலறவிட்ட மின் வெட்டு.. வந்தது நல்ல செய்தி.. ஒவ்வொரு ஏரியாவாக சீராகிறது!
சென்னை: சென்னையில் மின் விநியோகம் சீராகத் தொடங்கி உள்ளது. மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு 10 மணி முதல் சென்னை மக்கள் கடும் அவதியடைந்தனர். இந்நிலையில், படிப்படியாக சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் மின் விநியோகம் சீராகி வருகிறது.
சென்னையில் இன்று இரவு 10 மணி அளவில் திடீரென மின் வெட்டு ஏற்பட்டது. சில நிமிடங்களில் மின்சாரம் வந்துவிடும் என எதிர்பார்த்த மக்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. 11 மணியைக் கடந்தும் மின் விநியோகம் வரவில்லை. இதையடுத்துத்தான் ஒட்டுமொத்த சென்னையிலும் மின் வெட்டு ஏற்பட்டு இருளில் மூழ்கியது ஒவ்வொருவருக்கும் தெரியவந்தது.

வட சென்னை பகுதியில் உள்ள மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னை முழுக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு நேரத்தில் ஏற்பட்ட மின் துண்டிப்பு காரணமாக சென்னை நகரமே இருளில் மூழ்கியது.
தேனாம்பேட்டை, எல்.ஐ.சி, நந்தனம், சைதாப்பேட்டை, கிண்டி, தியாகராய நகர், கோடம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, பட்டினப்பாக்கம், வடபழனி, சேத்துப்பட்டு, திருவல்லிக்கேணி, மைலாப்பூர், அடையாறு, ராயபுரம், திருவொற்றியூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. பிரதான சாலைகளில் மின்சாரம் இல்லாததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
மின் விநியோக பாதிப்பு காரணமாக சென்னையில் பறக்கும் ரயில் நிலையங்கள் உள்பட அனைத்து ரயில் நிலையங்களும் இருளில் மூழ்கின. பேருந்து நிலையங்களும் இருளில் மூழ்கியதால் பயணிகள் தவித்தனர். மேலும், வீடுகளில் குழந்தைகளை வைத்திருப்போர், மிகவும் அவதிப்பட்டனர்.

தமிழ்நாடு மின் வாரிய சேவை எண்ணிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என பொதுமக்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தினர். மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளதாகவும். 30 நிமிடங்களில் மின் விநியோகம் சரியாகும் என்றும் மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். இதனை அடுத்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
மின் வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி கூறுகையில், வட சென்னை பகுதியின் மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னை முழுவதும் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. படிப்படியாக மின்சாரம் வழங்கும் பணி துவங்கியுள்ளது. மத்திய சென்னை பகுதியில் மின் விநியோகம் கொடுக்க துவங்கியுள்ளோம். வடசென்னை பகுதியில் அடுத்த 30 நிமிடங்களில் மின் விநியோகம் சீராகும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பூவிருந்தவல்லி, போரூர், மதுரவாயல், திருவேற்காடு, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் சீராகியுள்ளது. படிப்படியாக மின் விநியோகம் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இன்று இரவுக்குள் முழுமையாக சென்னை நகர் முழுவதும் மின் விநியோகம் சீராகும் என்றும் மின் வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications