சென்னை ஐகோர்ட் எதிரில் உள்ள என்எஸ்சி போஸ் சாலையில் ஆக்கிரமிப்பு.. நீதிபதிகள் கடும் வார்னிங்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு எதிரில் உள்ள என்எஸ்சி போஸ் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணை நடந்துவருகிறது. இந்நிலையில் என்எஸ்சி போஸ் சாலை, நடைபாதையில் அகற்றப்பட்ட கடைகள் மீண்டும் அமைக்கப்பட்டது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் உயர் நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் அதாவது எதிரிலேயே உள்ள பகுதி என்றால், என்எஸ்சி போஸ் சாலை தான். இங்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் மாநகராட்சி மற்றும் காவல்துறை அவ்வப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். எனினும் நடைபாதை வியாபாரிகள் மீண்டும் அதே இடத்திற்கு வருவது தொடர்கதையாக இன்று வரை நீடித்து வருகிறது. பாரிமுனை சந்திப்பிலிருந்து உயர் நீதிமன்ற வாயில் வரை தள்ளுவண்டிகள் மற்றும் தற்காலிக கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.

நடைபாதைகளை மக்கள் நடப்பதற்கே பயன்படுத்த வேண்டும் என்றும், வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் எதையும் அனுமதிக்கக் கூடாது என்றும் உயர் நீதிமன்றம் பலமுறை சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருக்கிறது. ஆக்கிரமிப்புகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க சிசிடிவி (CCTV) கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும், தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் எச்சரித்து வருகிறது. இந்த பகுதியை ஆக்கிரமிப்பு இல்லாத மண்டலமாக அறிவித்து நடவடிக்கை எடுத்து வருகிறது உயர்நீதிமன்றம்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு எதிரில் உள்ள என்எஸ்சி போஸ் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார்.
மேலும் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அகற்றப்படும் கடைகள் மீண்டும் உருவாகாமல் தடுக்கும் வகையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் என்.எஸ்.சி போஸ் சாலை, வியாபாரம் செய்யக் கூடாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கடைகள் அகற்றப்பட்ட பிறகும் கூட மீண்டும் முளைத்து விடுவதாக வழக்கறிஞர்கள் சென்னை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர்கள், அவர்களின் மொபைல் எண்களை என்எஸ்சி போஸ் சாலையில் பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக பலகையில் தெரியும்படி வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், நடைபாதை கடைகள் ஆக்கிரமிப்பை கண்காணிக்க இரண்டு வழக்கறிஞர்களை ஆணையர்களாக நியமித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகள் மீண்டும் உருவானதாக வழக்கறிஞர்கள் ஆணையர் அறிக்கை அளித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டு விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தார்கள்.












Click it and Unblock the Notifications