செந்தில் பாலாஜி வழக்கில் செம்ம ட்விஸ்ட்- சகோதரர் அசோக் குமார் கைது இல்லையாம்- அமலாக்கத்துறை
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்படவே இல்லை என அமலாக்கத்துறை அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தார்; இதில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றது என கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான பல இடங்களில் சோதனைகள் நடத்தியது.

இந்த சோதனைகளைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே செந்தில் பாலாஜி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளின் முடிவில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதித்தது.
இதனடிப்படையில் செந்தில் பாலாஜி காவலில் எடுக்கப்பட்டு அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணையில் பல கேள்விகளுக்கு தமது சகோதரர் அசோக்குமாருக்குதான் அனைத்தும் தெரியும் என செந்தில் பாலாஜி கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் கேரளா மாநிலம் கொச்சியில் அசோக்குமார் நேற்று கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன. இது தொடர்பாக பல்வேறு தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவின.
இதனிடையே செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார், அமலாக்கத்துறையால் கைது செய்யப்படவில்லை எனவும் அவருக்கு பல முறை சம்மன் அனுப்பப்பட்டது என்றும் அமலாக்கத்துறை தரப்பு தெரிவித்திருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இதனால் செந்தில் பாலாஜி வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications