ஆட்டம் காணும் அஸ்திவாரம்.. விசாகன் ஐஏஸ் லேப்டாப்பில் சிக்கிய ஆதாரம்? பிடியை இறுக்கும் அமலாக்கத்துறை
சென்னை: டாஸ்மாக் மது விற்பனை மூலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்த புகாரில் டாஸ்மாக் அலுவலகம், டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் ஐஏஎஸ் உள்ளிட்டோரது வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில் விசாகன் ஐஏஎஸ்-ன் செல்போன் மற்றும் லேப்டாப்பில் இருந்து பல முக்கிய ஆவணங்கள் அமலாக்க துறையால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வைத் துறையின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் மூலம் தமிழக முழுவதும் மது விற்பனை நடைபெறுகிறது. மது விற்பனை மூலம் மட்டுமே ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்பனை மற்றும் மதுபான ஆலைகளுடன் இணைந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடைபெற்றதாக பரபரப்பு புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள், டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலை அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.

இதனை சட்ட விரோதமாக அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த நிலையில் அதனை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் அமலாக்க துறையின் அடுத்த கட்ட விசாரணைக்கும் தடையில்லை என அறிவித்தது. இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் அமலாக்கத்துறை தமிழகத்தில் சோதனை நடத்தியது. குறிப்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் ஐஏஎஸ்-ன் வீட்டில் அவரிடமும் அவரது மனைவியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றும் 5 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அது மட்டும் இல்லாமல் ரித்தீஷ் என்பவரும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் பராசக்தி உள்ளிட்ட படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் விசாகன் ஐஏஎஸ் நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அது மட்டும் அல்லாமல் விசாகனின் செல்போன் மற்றும் லேப்டாப்பை சோதனை செய்த போது அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் அமலாக்க துறையால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது மட்டும் அல்லாமல் சூளைமேட்டில் மதுபான நிறுவனத்தின் பிஆர்ஓ மேகநாதன் வீடு, திருவல்லிக்கேணி தேவகுமார், சாஸ்திரி நகர் மின்வாரிய ஒப்பந்ததாரரான ராஜேஷ் குமார், சேத்துப்பட்டு கேசவன், எம்ஆர்சி நகரில் தொழிலதிபர் ரித்தீஷ் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் அது முடிவடைந்திருக்கிறது. நள்ளிரவு இரண்டு மணி வரை சோதனை நடைபெற்ற நிலையில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அந்த ஆவணங்கள் காரில் நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சோதனையில் கிடைத்த ஆவணங்கள், அடுத்த கட்ட நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து அமலாக்கத்துறை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications