தூத்துக்குடி டூ மதுரை.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இறுகும் அமலாக்கத்துறை பிடி! கேஸில் ட்விஸ்ட்
சென்னை: மீன்பிடித் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், அதிரடி திருப்பமாக தூத்துக்குடி நீதிமன்றத்திலிருந்து மதுரைக்கு வழக்கை மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது அமலாக்கத்துறை. வழக்கு மதுரைக்கு மாறினால் விவகாரம் இன்னும் விஸ்வரூபம் எடுக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
கடந்த 2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், கால்நடை பராமரிப்பு மற்றும் வீட்டுவசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பொறுப்பு வகித்தார். அந்த காலகட்டத்தில், அவரும் அவரது குடும்பத்தினரும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக தி.மு.க அரசு 2006-ல் வழக்குப்பதிவு செய்தது. லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) நடத்திய விசாரணையில், அமைச்சரின் குடும்பச் சொத்து மதிப்பு 23 லட்ச ரூபாயிலிருந்து 6.86 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பது கண்டறியப்பட்டது.

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு
இதில் சுமார் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளுக்கு முறையான கணக்கு இல்லை எனக்கூறி, 2013-ல் லஞ்ச ஒழிப்புத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த ஊழல் வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்தது.
நீதிமன்றப் போர்!
தற்போது இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கு தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால், "பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளை விசாரிக்க மதுரை நீதிமன்றத்திற்கே அதிகாரம் உள்ளது. எனவே, தூத்துக்குடியில் உள்ள வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்" என அமலாக்கத்துறை பிடிவாதம் காட்டி வருகிறது.
முன்னதாக, தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. "எங்கள் நீதிமன்றத்திற்கு இந்த மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை" எனத் தூத்துக்குடி நீதிபதி கைவிரித்துவிட்டார்.
உயர் நீதிமன்றத்தில் க்ளைமாக்ஸ்?
இதை எதிர்த்துதான் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் பி. சித்தார்த்தன் வாதிடுகையில், "சட்டப்பிரிவு 44-ன் படி, பணப்பரிமாற்ற வழக்கு எங்கு நடக்கிறதோ, அங்குதான் அதன் அடிப்படை ஊழல் வழக்கும் மாற்றப்பட வேண்டும். தூத்துக்குடி நீதிமன்றம் இதை நிராகரித்தது சட்டப்படி தவறு" என வாதிட்டார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிக்காரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. நான்கு வாரங்களுக்குள் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிக்காரி முன் விசாரணை
ஏற்கனவே அமலாக்கத்துறையின் விசாரணையால் டென்ஷனில் இருக்கும் அமைச்சர் தரப்புக்கு, இந்த இடமாற்ற முயற்சி கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு மதுரைக்கு மாறினால் விவகாரம் இன்னும் விஸ்வரூபம் எடுக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
அடுத்து என்ன நடக்கும்? நான்கு வாரங்களுக்குப் பிறகு அமைச்சர் தரப்பு தாக்கல் செய்யப்போகும் பதில் மனுவில் என்ன இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications