சென்னை - தூத்துக்குடி விமானத்தில் கோளாறு.. ஓடுபாதையில் நிறுத்தம்! பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
சென்னை: சென்னையில் இருந்து 65 பயணிகள் மற்றும் 5 சிப்பந்திகளுடன் தூத்துக்குடி புறப்பட்ட விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டு அவசர அவசரமாக மீண்டும் நடைமேடை பகுதிக்கே கொண்டு வரப்பட்டது. உரிய நேரத்தில் கோளாறு கண்டறியபட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் 10 க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று சென்னையில் இருந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சென்னையில் இருந்து 65 பயணிகள் மற்றும் 5 விமான சிப்பந்திகளுடன் தூத்துக்குடிக்கு புறப்பட தயாரானது.

விமானத்தில் இயந்திரக்கோளாறு
இன்று காலை 10 மணியளவில் விமானம் புறப்பட இருந்த நிலையில், விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். உடனடியாக இது பற்றி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விமானத்தை தொடர்ந்து இயக்கினால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக விமானி கூறியதையடுத்து, விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப கொண்டு வரப்பட்டது.
முழு வீச்சில் பழுதுபார்க்கும் பணி
இழுவை வண்டி மூலம் விமானத்தை இழுத்து வந்த பணியாளர்கள் நடைமேடைக்கு கொண்டு வந்தனர். பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டுள்ள நிலையில், விமானத்தில் பழுது பார்க்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பழுது பார்க்கும் பணிகள் முடிந்ததும் விமானம் புறப்படும் என்றும் பழுது பார்க்கும் பணிகள் முடிய தாமதமானால் மாற்று விமானம் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒரே ஒரு பயணியை தவிர அனைத்து பயணிகளும் உயிரிழந்தனர். விமானம் ஒரு மருத்துவ கல்லூரி விடுதியில் விழுந்து நொறுங்கியதால், அந்த கட்டிடத்தில் இருந்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
விமான பயணிகள் கலக்கம்
விமானத்தில் பயணம் செய்தவர்கள் மற்றும் கீழே இருந்தவர்கள் என மொத்தம் 270 பேர் பலியாகினர். ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விபத்தை தொடர்ந்து விமானங்களில் சிறிய கோளாறு இருந்தால் கூட அதனை உடனடியாக சரி செய்த பிறகே பறக்க அனுமதிக்கப்படுகிறது. சமீப நாட்களாக விமானங்களில் கோளாறு ஏற்பட்டு அடிக்கடி தரையிறக்கப்படுவதும், விமானங்கள் ரத்து செய்யப்படும் நிகழ்வுகளும் அதிகரித்து இருப்பது விமான பயணிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications