பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. மாணவர்கள் மத்தியில் அதிகரித்த மவுசு!
சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கு இன்றே (ஜூன் 6) கடைசி நாள். இதுவரை 2.95 லட்சம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டில் 2.53 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டிருந்தன.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை கடந்த மே 7 ஆம் தேதி தொடங்கியது.

பொறியியல் கல்லூரிகள்
தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதில் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரி, அரசு கல்லூரி, அரசு நிதியுதவி பெறும் கல்லூரி, தனியார் சுயநிதி கல்லூரி ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.
இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
2.90 லட்சம் பேர் விண்ணப்பம்
வியாழக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 134 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர்களில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 732 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியிருப்பதாகவும் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் உறுதிப்படுத்தினார்.
இன்றே கடைசி
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று ஜூன் 6 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் என்பதால் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி விரைவாக விண்ணப்பித்து 9 ஆம் தேதிக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
விண்ணப்ப செயல்முறையை முடிக்க மாணவர்களுக்கு உதவ, உதவி மையங்கள் மற்றும் கட்டணமில்லா உதவி எண் வழங்கப்பட்டுள்ளன. 1800 425 0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொள்ளலாம். விண்ணப்ப பதிவு செய்துள்ள மாணவ மாணவிகளுக்கு ரேண்டம் எண் வெள்யிடப்பட்டு, அவர்களுக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும்.
கவுன்சிலிங்
அதைத் தொடர்ந்து, விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். அதன் பிறகு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும். விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும். குறிப்பிட்ட நாட்களுக்குள் அவர்கள் அதனை உறுதி செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications