செந்தில்பாலாஜிக்காக எழுந்து தள்ளி அமர்ந்த துரைமுருகன்! தமிழச்சி தங்கபாண்டியன் இல்ல மண விழா ருசிகரம்!
சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் இல்ல மணவிழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்காக துரைமுருகன் தனது நாற்காலியை அட்ஜெஸ்ட் செய்து தள்ளி அமர்ந்தது திமுகவினரை புருவம் உயர்த்த வைத்துள்ளது.
இதேபோல் முதல்வரிசையில் அமர்ந்திருந்த தொழிலதிபர்களும், கூட்டணிக் கட்சி தலைவர்களும் மற்ற அமைச்சர்களை கண்டு எழுந்து வணக்கம் வைக்காத நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜியை கண்டதும் எழுந்து நின்று வணக்கம் கூறிய நிகழ்வும் நடந்துள்ளது.
இதனிடையே திருமண விழாவுக்கு வந்திருந்த மற்ற அமைச்சர்கள் இவற்றை பார்த்தும் பார்க்காதது போல் அமர்ந்திருந்தனர்.

தமிழச்சி தங்கபாண்டியன்
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மகள் நித்திலாவுக்கும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன் மகன் டாக்டர் கீர்த்தனுக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி முக்கியப் பிரமுகர்கள் பலர் வருகை புரிந்தனர். இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக திருமண மண்டபத்திற்குள் என்ட்ரியானார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

அமைச்சர் செந்தில்பாலாஜி
அமைச்சர் செந்தில்பாலாஜியை கண்டதும் திருமண மண்டபத்தின் முதல் வரிசையில் அமர்ந்திருந்த ராம்ராஜ் காட்டன் நிறுவன அதிபர் உட்பட பல தொழிலதிபர்களும் எழுந்து நின்று வணக்கம் வைத்தனர். இதேபோல் முத்தரசன் உட்பட கூட்டணிக் கட்சி முக்கியப் பிரமுகர்களும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எழுந்து நின்று வணக்கம் கூறி அவரிடம் தங்கள் இருப்பை வெளிப்படுத்தினர். முதல் வரிசையில் நாற்காலி எதுவும் காலியாக இல்லாத சூழலில், திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அமர்ந்திருந்த இடம் அருகே இருந்த சிறிய இடத்தில் புதிதாக ஒரு நாற்காலி போட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி அமரவைக்கப்பட்டார்.

துரைமுருகன் அருகில்
செந்தில்பாலாஜிக்காக தனது நாற்காலியை சிறிது அட்ஜெஸ்ட் செய்து தனது பக்கத்தில் அவரை அமரவைத்துக்கொண்டார் அமைச்சர் துரைமுருகன். பொதுவாக அமைச்சர் துரைமுருகன் அவ்வளவு எளிதாக யாரிடமும் நெருங்கமாட்டார். இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்காக தனது நாற்காலியை தள்ளிப்போட்டு அவர் எழுந்து அமர்ந்ததை வியப்புடன் பார்க்கின்றனர் திமுகவினர். இதனிடையே எல்லோரும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வணக்கம் வைத்ததுடன் திருமணத்தில் பங்கேற்றவர்கள் செல்ஃபியும் எடுத்துக்கொண்ட நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மட்டும் அவரை கண்டும் காணாததும் போல் அமர்ந்திருந்தார்.

தேர்தல் முடிவு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுகவுக்கு பெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்ததால், தேர்தல் முடிவுக்கு பிறகு அவரது செல்வாக்கு தலைமையிடம் உயர்ந்திருப்பதற்கு இது போன்ற நிகழ்வுகள் உதாரணமாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications