EPFO 3.0: இன்று முதல் பிஎஃப் பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுக்கும் முறை அமலாகிறதா?
சென்னை: ஜூன் 1 ஆம் தேதி முதல் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO) 3.0 அறிமுகப்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இது அமலானால் பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுப்பது மிகவும் சுலபமாகும். அது போல் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பது போல் EPF ATM அட்டையை பயன்படுத்தி பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கும் முறை அமலாகும்.
ஒவ்வொரு ஊழியர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி எனப்படும் EPF என்பது ஊதியத்தில் இருந்து பிடிக்கப்பட்டு வருகிறது. இது தனித்தனி கணக்கு எண்ணில் வரவு வைக்கப்படுகிறது. ஊழியரும், வேலை கொடுக்கும் நிறுவனத்தினரும் தங்கள் பங்குக்கு பணத்தை போடுவர்.

இது அந்த ஊழியர் ஓய்வு பெறும் வரை சேர்ந்து கொண்டே வந்து, கடைசியில் ஒரு குறிப்பிட்ட தொகை இருக்கும். இதை வைத்து குழந்தைகளின் படிப்பு, கல்யாணம் உள்ளிட்டவைகளை நடத்திக் கொள்வர்.
இந்த நிலையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த திட்டம் ஜூன் 2025 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என சொல்லப்பட்டது.
அது போல் ஒவ்வொரு ஊழியர்களின் பிஎஃப் பங்களிப்பு மாற்றப்படலாம் என சொல்லப்படுகிறது. அதாவது தற்போது ரூ 1800 பிஎஃப்பில் கொடுக்கிறார்கள் என்றால் அவர்கள் விருப்பப்பட்டால் கூடுதலாக கொடுக்கலாம். ஆனால் நிறுவனத்தினரின் பங்களிப்பில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த நிலையில் பிஎஃப் கணக்கிற்கான வட்டியை அரசு விரைவில் செலுத்தும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த பணம் இன்னும் செலுத்தப்படவில்லை. இவ்வாறு வட்டி பணம் செலுத்தப்பட்டால் சுமார் 7 கோடி பேர் பயன்பெறுவார்கள். அதாவது உங்கள் கணக்கில் ரூ 1 லட்சம் இருந்தால் 8.25 சதவீதம் வட்டி என கணக்கிட்டால் ரூ 8,250 கிடைக்கும்.
பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை கணக்கிட எஸ்எம்எஸ் அல்லது உமாங் செயலி மூலம் கணக்கிடலாம். பிஎஃப் கணக்கில் முன்கூட்டியே முன்பணம் வேண்டும் என்றால் 3 நாட்களில் எடுத்துக் கொள்ளலாம். திருமணம், கல்வி, வீடு கட்டுவதற்கு என பிஎஃப் தொகையிலிருந்து முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம்.
இபிஎஃப் 3.0 அறிமுகப்படுத்தப்பட்டால் ஊழியர்கள் தங்கள் இருப்புகளை யூபிஐ மூலம் பார்க்கலாம். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஓடிபி மூலம் சரிபார்க்கும் நடைமுறையை கூட பயன்படுத்திக் கொள்ளலாம். ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுப்பதிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இந்த 3.0வின் சாராம்சமே ஊழியர்கள் எந்த வித சிக்கலும் இல்லாமல் தங்கள் பிஎஃப் பணத்தை அவசர தேவைக்கு எடுத்து செலவு செய்வது ஆகும். ஏடிஎம் மூலம் பிஎஃப் கணக்கிலிருந்து 50 சதவீதம் வரை பணத்தை எடுக்கலாம். ஒவ்வொரு ஊழியரும் பிஎஃப் கணக்கில் தங்கள் ஊதியத்தில் 8.33 சதவீதம் வரவு வைக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications