டிவி விவாதங்களுக்கு அழைக்க வேண்டாம்.. இனிமேல் அதிமுக பங்கேற்காது.. ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை
சென்னை: கட்சித் தலைவர்களுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் விவாதங்களைத் தொடர்ந்து நடத்துவதால் இனி டிவி விவாதங்களில் அதிமுக நிர்வாகிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தொலைக்காட்சி விவாதங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும் பேச்சாளர்கள் அல்லது நிர்வாகிகள் பங்கேற்பது வழக்கம்.
இந்நிலையில், டிவி விவாதங்களில் இனிமேல் அதிமுக நிர்வாகிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக அறிக்கை
இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "எம்ஜிஆரால் அடித்தட்டு மக்களுக்காகவும் அவர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதற்காகவும் தொடங்கப்பட்ட மாபெரும் பேரியக்கம் தான் அதிமுக. எம்ஜிஆர் ஆட்சியின் நீட்சியாக தன்னுடைய இறுதிக் காலம் வரை மக்களுக்காகவும், அதிமுகவுக்காகவும் வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவும் அதே எண்ணத்தோடு இயக்கத்தையும், தமிழகத்தையும் வழி நடத்தி இருக்கிறார்.

அதிமுக புகழுக்கு இழுக்கு
அதைப்போலவே எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வகுத்த பாதையில் சிறிதும் தடம் மாறாமல் அரசியல் களத்தில் நாங்கள் பயணித்து வருகிறோம். மக்களின் அடிப்படைத் தேவைகள் தினசரி பிரச்சினைகள் பல இருக்கின்ற போது அதைப் பற்றியெல்லாம் சிறிதளவும் கவலைப்படாமல் ஜனநாயகத்தின் அங்கங்களாக இருக்கக்கூடிய ஊடக நிறுவனங்கள் அதிமுக புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் சிறுமைப்படுத்தும் நோக்கிலும் மனம் போன போக்கில் ஊடக அறிக்கை தொடர்பாகவும், கட்சித் தலைவர்களுக்குக் களங்கம் ஏற்படுகின்ற விதத்திலும் விவாத தலைப்புகளை வைத்து நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்துவது உள்ளபடியே மனதிற்கு வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.

பங்கேற்க மாட்டார்கள்
மேற்சொன்ன காரணங்களால் ஊடக விவாதங்களில் அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகளும் செய்தித் தொடர்பாளர் கட்சியைச் சார்ந்தவர் யாரும் இனி பங்கேற்க மாட்டார்கள் என்பதையும் எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக் கொண்டு யாரையும் வைத்துப் பேசுவதை நிறுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். எனவே கட்சியின் பெயரை வேறு எந்த வகையிலும் பிரதிபலிக்கும்படி யாரையும் தங்கள் ஊடக வழியாகக் கருத்துக்களைத் தெரிவிக்க அழைக்கவும், அனுமதிக்க வேண்டாம்.

அழைக்க வேண்டாம்
வேறு யாரையும் அழைத்து அவர்களை அதிமுக என்று அடையாளப்படுத்த வேண்டாம் என்றும் அன்பு கூர்ந்து கேட்டுக் கொள்கிறோம். இந்த முக்கியமான விவகாரத்தில் தொலைக்காட்சி மற்றும் சமூகத் தொடர்பு ஊடகங்களில் மேலான ஒத்துழைப்பை அன்புடன் எதிர்பார்க்கிறோம்" என அவர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications