பழத்தில் ஊசி ஏற்றும் பாஜக.. வகை, தொகை தெரியாமல் சிக்கும் எடப்பாடி! அண்ணாச்சிக்கு இப்படி ஒரு சிக்கலா?
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் சிக்கல் உருவாகி இருக்கிறது. பாஜக கூட்டணியில் இருப்பதால் அதிமுகவுடனும் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம் என கூறி இருக்கிறார் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். தினகரன், ஓபிஎஸ்-ஐ இனி கட்சிக்குள் அனுமதிக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கும் நிலையில் பாஜக வாயிலாக இருவரும் அதிமுக மேடை ஏற முயன்று வருவதாக கூறப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை ராணுவ கட்டுப்பாட்டோடு இயங்கிய இயக்கம் என்பார்கள் அதிமுகவை. ஆனால் ஒரு கட்சியில் இவ்வளவு பிரச்சனை நடக்குமா என்பது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை பார்த்து தான் பலரும் தெரிந்து கொண்டனர்.
ஓபிஎஸ் வெளியேற்றம், சசிகலா முதலமைச்சராக முயன்றது, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனது, டிடிவி தினகரன் வெளியேற்றம் என 2017 முதல் 2021 வரை பல்வேறு அரசியல் மோதல்கள் ஏற்பட்டது. அதற்கு பிறகாவது அதிமுக அமைதியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்தது.

பின்னர் பொதுக்குழு, செயற்குழு, நீதிமன்ற விவகாரம், தேர்தல் ஆணையம் முறையீடு என மீண்டும் அதிமுக அரசியல் புயலில் சிக்கித் தவித்தது. ஒரு வழியாக டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை முற்றாக புறம் தள்ளிவிட்டு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொது செயலாளராக பதவி வகித்து வருகிறார். தொடர்ந்து கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எடப்பாடியின் முடிவு தான் வேத வாக்கு என கூறி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி.
விவகாரங்கள் ஒருபுறம் இப்படி போய்க் கொண்டிருக்க பாஜக கூட்டணியால் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது. முதல் பிரச்சனையே கூட்டணி ஆட்சி தான். பாஜக தலைவர்கள் கூட்டணி ஆட்சி எனக் கூற, அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனக் கூறி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இப்படி முதல் கோணலே முற்றும் கோணல் என்பது போல அதிமுக கூட்டணி பொருந்தா கூட்டணி என விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் மற்றொரு சிக்கலாய் வழியாக அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் மீண்டும் அதிமுக கூடாரத்திற்கு வர முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் டிடிவி தினகரன். அப்படி நேற்று ஒரு நிகழ்வு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக கூட்டணி திமுகவை நிச்சயம் வீழ்த்தும். நாங்கள் அதிமுக கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பதை நயினார் நாகேந்திரன் தான் கூற வேண்டும்.
ஆனால் நாங்கள் பாஜக கூட்டணியில் தான் இருக்கிறோம். இந்த கூட்டணியால் மட்டுமே திமுகவை வெல்ல முடியும் எனக் கூறியிருக்கிறார். அதாவது திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுக, அமமுக, பாஜக, ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை மறைமுகமாக சொல்லி இருக்கிறார் டிடிவி. இதன் மூலம் நீண்ட காலங்களுக்கு பிறகு அதிமுக மேடையில் எடப்பாடி உடன் இடத்தை பகிர்ந்து கொள்ள விரும்புவதாக மறைமுக மெசேஜை அனுப்பி இருக்கிறார்.
இது ஒரு புறம் இருக்க, சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை ஆரம்பித்து ஆண்டுகள் பல கடந்து விட்ட நிலையில் அந்த இயக்கத்தின் செயல்பாடு என்ன என்று தெரியவில்லை. பாஜகவும் மதிக்கவில்லை. இதனால் அதிமுக பக்கமே சென்று விடலாமா என்பது ஓபிஎஸ் ஆதரவாளர்களின் எண்ணமாக இருக்கிறது. பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
இப்படி தன்னால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் பாஜக மூலம் கட்சிக்குள் வந்து விடுவார்களோ என்ற அச்சம் எடப்பாடிக்கு இருக்கிறது. அதனால் தான் டிடிவி. ஓபிஎஸ் குறித்து இதுவரை வாய் திறக்காமல் இருக்கிறார் எடப்பாடி. அதே நேரத்தில் கூட்டணி மூலம் கட்சிக்குள் வந்துவிட்டால் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications