எடப்பாடினு சொன்னாலே பயம் வரனும்.. ஹோட்டல் மீட்டிங்கில் வெடித்த இபிஎஸ்! விஜய்க்கு லட்டு போல் சான்ஸ்!
சென்னை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளாராம். தகுதி நீக்க புகாரை வாபஸ் பெற வேண்டும் என சில சீனியர்கள் கூற, என் மீது எப்படி அவர்களுக்கு பயம் வரும்? இன்னொரு தேர்தலையும் பார்ப்போம் கறாராக எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்டாராம்!.
சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதுவே அதிமுகவில் வெளிப்படையான பிளவை உருவாக்கியது.

இதையடுத்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அந்த 25 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் எடப்பாடி தரப்பு புகார் மனு அளித்தது. இந்த நடவடிக்கை அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சட்ட ரீதியாக மிகப்பெரிய அழுத்தத்தை உருவாக்கியது.
அதிமுக பிளவு
இதற்கிடையில், கட்சிக்குள் சமரச முயற்சிகளும் அமைதியாக நடைபெற்றுவருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக இரு தரப்பினருக்கும் இடையே மறைமுக பேச்சுவார்த்தைகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு தொழிலதிபரின் விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனையில், எடப்பாடி தரப்பிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
ரகசிய ஆலோசனை
மறுபுறம், வேலுமணி தரப்பிலிருந்து தங்கமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த சந்திப்பில் கிளர்ச்சி அணியினர் சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக, 25 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க மனுவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும், தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய தனி குழு அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எடப்பாடி பழனிசாமி
அதோடு, கட்சியில் நீக்கம், சேர்க்கை போன்ற முக்கிய முடிவுகளை ஒரே நபர் எடுக்காமல், ஒரு வழிகாட்டுதல் குழு மூலம் முடிவு செய்யும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தக் குழுவின் ஆலோசனையை அடிப்படையாகக் கொண்டே பொதுச்செயலாளர் செயல்பட வேண்டும் என்பதும் கிளர்ச்சி அணியின் கோரிக்கையாக இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கோரிக்கைகள் குறித்து தகவல் கிடைத்தவுடன் எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
மூத்த நிர்வாகிகள்
குறிப்பாக, "புகாரை வாபஸ் பெற்றால் கட்சியில் ஒழுக்கம் இருக்காது" என்ற மனநிலையில்தான் அவர் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "தகுதி நீக்க மனு நிலுவையில் இருந்தால்தான் கிளர்ச்சி அணியினர் கட்டுப்பாட்டில் இருப்பார்கள்" என்ற கருத்தை எடப்பாடி தரப்பு வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், சில மூத்த நிர்வாகிகள் இதனால் கட்சிக்கே பெரிய பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்களாம்.
தகுதி நீக்கம்
"25 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், அதற்கான பழி முழுவதும் கட்சித் தலைமையின்மீது விழும். மேலும் இடைத்தேர்தலை சந்திக்கும் நிலையில் அதிமுக இல்லை" என்று நேரடியாகவே சிலர் எடப்பாடியிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அதற்கும் எடப்பாடி பழனிசாமி தளராத நிலைப்பாட்டில்தான் இருப்பதாக கூறப்படுகிறது. "கட்சிக்கும் தலைமைக்கும் எதிராகச் செயல்பட்டவர்கள் நடவடிக்கையை சந்திக்க வேண்டும். இல்லையெனில் பொதுச்செயலாளர் பதவிக்கே மதிப்பு இருக்காது" என்று அவர் கூறியதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இடைத்தேர்தல்
இந்த சூழலில், தற்போது அனைத்து தரப்பினரின் கவனமும் சபாநாயகர் எடுக்கப்போகும் முடிவின் மீது திரும்பியுள்ளது. எடப்பாடி தரப்பு மனுவை வாபஸ் பெறவில்லை என்றால், 25 எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை அந்த 25 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் நிலை உருவாகலாம். அப்படியான சூழல் ஏற்பட்டால், அந்த தேர்தலை பயன்படுத்தி தனிப்பெரும்பான்மையைப் பெற தவெக திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தவெக விஜய்
ஏற்கனவே கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் இருக்கும் தவெக விஜய், இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றால் தனித்து ஆட்சி நடத்தும் வலிமையைப் பெறும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதனால், எடப்பாடி பழனிசாமி எடுக்கப்போகும் அடுத்த கட்ட முடிவு அதிமுகவின் எதிர்காலத்தையும், தமிழக அரசியலின் அடுத்த திருப்பத்தையும் தீர்மானிக்கும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications