சென்னையில் சசிகலா வீடு முன்பு திடீரென குவிந்த அதிமுக தொண்டர்கள்- ஓபிஎஸ்,ஈபிஎஸ்-க்கு எதிராக முழக்கம்!
சென்னை: சென்னையில் சசிகலா வீடு முன்பாக இன்று குவிந்த அதிமுக தொண்டர்கள், ஓபிஎஸ்-ஈபிஎஸ்-க்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதுடன் சசிகலாதான் கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று கோஷமிட்டதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் கோஷ்டிகளாகப் பிளவுபட்டுள்ளது. அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராவதில் ஈபிஎஸ் (எடப்பாடி பழனிசாமி) முனைப்பாக உள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் ஈபிஎஸ்-ன் ஒற்றை தலைமையை வலியுறுத்தியே முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ஜூலை 11-ல் நடைபெறும் புதிய அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக ஈபிஎஸ்ஸை நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
ஈபிஎஸ் கோஷ்டியின் இந்த அமளிதுமளிக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்து பொதுக்குழுவில் இருந்து ஆதரவாளர்களுடன் நேற்று வெளியேறினார். இன்று டெல்லி சென்றுள்ள ஓபிஎஸ் கோஷ்டி, ஜூலை 11-ல் நடைபெறும அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக மனு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலா வீடு முன்பாக திடீரென அதிமுக தொண்டர்கள் திரண்டனர். கைகளில் அண்ணா திமுக கொடியை பிடித்தபடி, ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆகியோருக்கு எதிராக அவர்கள் முழக்கம் எழுப்பினர். மேலும் அதிமுகவுக்கு சசிகலாதான் தலைமை ஏற்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
Recommended Video
அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டிருக்கும் நிலையில் சசிகலா புரட்சி பயணம் மேற்கொள்வதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே அதிமுக தொண்டர்கள் சசிகலா வீடு முன்பாக குவிந்து முழக்கமிட்டது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications