கச்சை கட்டிய எடப்பாடி.. “பாஜகவுக்கு அடிமை யார்? சிறுபான்மை காவலர் யார்?” ஸ்டாலினுக்கு காரசார பதிலடி
சென்னை: பாஜகவுடனான கூட்டணியை முறித்த பிறகு சிறுபான்மையினர்களை தொடர்ந்து சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் எடப்பாடி பழனிசாமி, இன்று வெளியிட்ட அறிக்கையில், பாஜக கூட்டணி, சிறுபான்மை நலன் தொடர்பாக குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "பா.ஜ.க-விடம் தமிழ் நாட்டின் உரிமைகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அடகு வைத்துள்ளதாகப் பேசியுள்ளார். ஆனால், 1999-ம் ஆண்டு, ஆட்சி அதிகாரத்திற்காக 5 ஆண்டுகள் பா.ஜ.க-வின் அடிமையாக திமுக-தான் இருந்துள்ளது என்பதற்கு என்ன பதில் கூறப்போகிறார். மேலும், 2006 முதல் 2011 வரை தமிழகத்தில் மைனாரிட்டி திமுக அரசு, ஆட்சி அதிகாரித்தில் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும், மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு அச்சாரமிட்டதை திரு.ஸ்டாலின் வசதியாக மறந்துவிட்டாரா?

திமுக நிர்வாகிகளின் எல்லை மீறிய தவறுகள் சமூக ஊடகங்களில் வெளிவந்தபோது, தவறு செய்யும் திமுக நிர்வாகிகள் மீது சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்று சினிமா வசனம் பேசி 18 மாதங்களுக்கு மேல் ஆகிறது. தொடர்ந்து திமுக நிர்வாகிகள் / தொண்டர்களின் மக்கள் விரோதச் செயல்கள்; அதிகார அத்துமீறல்கள் நடந்துகொண்டுதான் உள்ளது. ஆனால், திரு. ஸ்டாலின் அவர்கள்தான் இன்னும் சர்வாதிகாரியாக மாறவில்லை.
மகளிர் இருசக்கர வாகன மானியத் திட்டம்; தாலிக்குத் தங்கம் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா செய்துவிட்டு, அந்நிதியைக் கொண்டு மகளிர் உரிமைத் தொகை வழங்கியுள்ளார். அதையும், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு அனைத்து குடும்பப் பெண்களுக்கும் வழங்கவில்லை. பல்வேறு நிபந்தனைகளை விதித்ததால் பாதிக்கும் மேற்பட்ட மகளிருக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை.
சிறுபான்மையினர் நலன் பற்றி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் வழிகாட்டுதல்படிதான், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடந்து வந்துள்ளது. 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் நலன் பற்றி, நாங்கள் கூறிய வாக்குறுதியின்படிதான் இன்றும் நாங்கள் நடைபோடுகிறோம். அதில் திடமாய் இருக்கிறோம். அதைத்தான் இப்போதும் உறுதிபடுத்தி உள்ளோம். கழகம் ஆரம்பித்தது முதல் இன்றுவரை தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என்று தமிழகத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் பாதுகாவலனாய் விளங்கி வருவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
ஆட்சிப் பொறுப்பேற்ற 29 மாத காலத்தில் விவசாயப் பெருமக்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், முதியவர்கள், பெண்கள், பொதுமக்கள் என்று அனைத்துத் தரப்பினரிடமும் கெட்டப் பெயரை சம்பாதித்துள்ள நிர்வாகத் திறனற்ற, பொம்மை முதலமைச்சர், திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் ஊழலைப் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர் ஆவார்.
திரு. ஸ்டாலின் அவர்களது குடும்ப ஊழல் பெருமையைப் பற்றி, அப்போதைய நிதியமைச்சர் பேசிய ஒலி நாடா சமூக ஊடகங்களில் வெளிவந்ததை வசதியாக மறந்துவிட்டார். மேலும், ஊழல் செய்துவிட்டு சிறைக்குச் சென்ற இலாக்கா இல்லாத அமைச்சரை, சென்னை உயர்நீதிமன்றமே தார்மீக ரீதியாக முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டுமென்று தெரிவித்தும், ஊழல் அமைச்சரை அமைச்சரவையில் இருந்து நீக்காதது கேலிக்கூத்தாக உள்ளது." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications