“Total failure.. 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை” - தமிழக அரசு மீது எடப்பாடி பழனிசாமி தாக்கு!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருவதாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமன எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் கூட Total Failure ஆக இருக்கிறது திமுக அரசு என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு அரிசிக்கு பதில் 1 - 2 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வரை, தமிழ்நாட்டுக்கு 17,100 டன் கோதுமை வழங்கப்பட்ட நிலையில், மார்ச் முதல் 8,576 டன் கோதுமை ஒதுக்கப்படுகிறது. இந்த மாதத்திற்கு 8,722 டன் கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரு வாரமாகியும் முழு அளவில் கோதுமை அனுப்பப்படவில்லை. இதனால், 12,753 கடைகளில் கோதுமை இல்லாததால், கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார்டுதாரர்களுக்கு கோதுமை தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எஸ்க் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருகின்றன. இந்த மாத்திற்கு 8,722 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தும், அதை முறையாக ரேஷன் கடைகளுக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு விநியோகம் செய்யவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்ட போதே, இந்த அரசை எச்சரித்தும், மிகுந்த மெத்தனப் போக்குடன் தான் செயல்பட்டது.
திமுக ஆட்சியில் மற்ற துறைகளைக் காட்டிலும், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது போலும். நெல் கொள்முதல் முதல், கோதுமை விநியோகம் வரை அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் கூட Total Failure ஆக இருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக கோதுமை ரேஷன் கடைகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications