ஒபிஎஸ் இருக்கட்டும்.. “எதிர்க்கட்சி தலைவராக” ஸ்கோர் பண்ணும் ஈபிஎஸ் - நாளை சம்பவம்! செக் யாருக்கு?
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் உடனான உட்கட்சிப் பூசல் பூதாகரமாக வெடித்திருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக தன்னை நிரூபிக்க ஆளும் திமுகவுக்கு எதிராக அழுத்தமான போராட்டங்களை நடத்த தொடங்கி இருக்கிறார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் இடையிலான பிரச்சனை கடந்த 2 மாதங்களாக தலைப்புச் செய்தியாக ஊடகங்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
இதில் கவனம் செலுத்தியதால் எதிர்க்கட்சியாக அதிமுக மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க தவறியதுடன், திமுக அரசு மீதான விமர்சனங்கள், போராட்டங்களை முன்வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது.

வாய்ப்பை பயன்படுத்தும் பாஜக
இதனை தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட பாரதிய ஜனதா திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்கள், ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமிழ்நாடு அரசியலில் எதிர்க்கட்சியாக தங்களை காட்டிக்கொள்ள முயன்று வருகிறது. குறிப்பாக அண்ணாமலையின் வருகைக்கு பிறகு தமிழ்நாட்டில் திமுகவுக்கு அடுத்தபடியாக பாஜக குறித்த செய்திகளேயே ஊடகங்களை ஆக்கிரமித்து இருக்கின்றன.

பாஜகவின் நகர்வு
கூட்டணியில் இருந்தாலும் எதிர்கட்சியாக அதிமுக முறையாக செயல்படவில்லை என்றும், உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான் என்றும் அக்கட்சியின் தலைவர்கள் பேசியும் வருகின்றனர். ஐதராபாத்தில் நடந்த பாஜகவின் செயற்குழுவுக்கு பிறகு அக்கட்சியின் வேகம் தென்னிந்தியாவில் அதிகரித்து இருப்பதை காண முடிகிறது. இதனை அறிந்த அதிமுகவினரும் அக்கட்சியை மெல்ல விமர்சிக்கத் தொடங்கினர்.

அதிமுக உட்கட்சிப் பிரச்சனை
இதற்கு இடையில்தான் அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை வெடித்து எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் இருதுருவங்களாக செயல்பட்டு வருகின்றனர். பல்வேறு தடைகளுக்கு பிறகு பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டாலும் ரெய்டுகள், வழக்குகள் என்று அவர் பாடு திண்டாட்டமாகவே உள்ளது. இதற்கிடையே பாஜக தலைமையும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாக இருப்பதாக செய்திகள் வருகின்றன.

சுதாரித்த அதிமுக
பாஜகவின் செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் அதிமுக ஓரம்கட்டப்படும் என்ற உணர்வு எடப்பாடி பழனிசாமிக்கும் இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் கருத்துக்களும் அதுவாகவே இருக்க, அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனையிலும் அவர் இறங்கி இருக்கிறாராம். பாஜகவுடன் கூட்டணி தொடர்ந்தால் அதிமுக தமிழ்நாடு அரசியலில் இருந்து ஓரம்கட்டப்படும் என்று அக்கட்சி வட்டாரங்களில் பேச்சு அடிபடுவதாக தகவல் தெரிவிக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர்
அதிமுகவின் உள்கட்சிப் பிரச்சனைகளை ஒருபக்கம் பார்த்துக்கொண்டே மறுபக்கம் வலுவான எதிர்க்கட்சியாக மக்கள் மத்தியில் பெயரெடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இருக்கிறாராம். குறிப்பாக பாஜகவை தமிழ்நாட்டில் வளர விடுவது தங்கள் இருப்புக்கே ஆபத்து என்பதை உணர்ந்து அடுத்தக்கட்ட நகர்வுகளையும், அதிமுகவின் பலத்தையும் காட்ட அவர் முடிவு செய்துள்ளார். அதன் விளைவாகவே தமிழ்நாடு முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக போராட்டத்தை நடத்தி வருகிறது. நாளை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெறும் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்.












Click it and Unblock the Notifications