சோலி முடிஞ்சு..செங்ஸால் Trigger ஆன எடப்பாடி! காங்கிரஸால் கடுப்பான திமுக! 3 கட்சியால் பாஜகவுக்கு பயம்
சென்னை: தேர்தல் முடிவுகள் வெளியான போது மிகுந்த அதிருப்தியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி தேவைப்பட்டால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தர தயாராக இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் செங்கோட்டையன் கட்சியை உடைக்க திட்டம் போட்டதால் தான் எடப்பாடி கோபமடைந்து இனிய ஆதரவு தர வாய்ப்பே இல்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் காங்கிரஸ் சென்றதால் திமுக கோபத்தில் இருக்கும் நிலையில், பாஜகவும் தமிழக வெற்றி கழகத்தின் மீது அதிருப்தியில் தான் இருக்கிறது. அதாவது தவெக - காங்கிரஸ் கூட்டணி வெற்றிகரமாக அமைந்தால் தென் மாநிலங்களில் காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெரும் சூழல் இருப்பதால் அதை நடக்க விடக்கூடாது என பாஜகவும் காய் நகர்த்துவதாக சொல்கின்றனர்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றி, மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியமைக்க தேவையான முழு பெரும்பான்மை இல்லாததால், அக்கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
234 உறுப்பினர்கள் கொண்ட தமிழக சட்டப்பேரவையில், சாதாரணமாக 118 உறுப்பினர்களின் ஆதரவு ஆட்சியமைக்க தேவை. ஆனால் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால், அவர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதனால் சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 233 ஆக குறையும். இதனால் பெரும்பான்மைக்கான கணக்கும் 117 ஆக மாறும். இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் விஜய்க்கு ஆதரவு கடிதம் வழங்கியுள்ளனர்.
மேலும், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவை பெறவும் தவெக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆதரவுகள் அனைத்தும் கிடைத்தாலும், சபாநாயகர் வாக்கு காரணமாக நிலைமை இன்னும் நெருக்கடியாகவே உள்ளது. சட்டப்பேரவையில் சபாநாயகராக தேர்வு செய்யப்படும் உறுப்பினர் பொதுவாக வாக்களிக்க மாட்டார். சம வாக்கு நிலை ஏற்பட்டால் மட்டுமே அவர் தீர்மான வாக்கு செலுத்துவார்.
அதனால் கணக்குக்கு இன்னும் பல உறுப்பினர்களின் ஆதரவு தவெகவுக்கு தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில், விஜய் காங்கிரஸ் ஆதரவு கடிதங்களுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இருப்பினும், தேவையான முழு பெரும்பான்மை ஆதரவு பட்டியல் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், உடனடியாக ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அதிமுக உள்ளேயே பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என ஒரு தரப்பு விரும்புகிறது. குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் தனிப்பட்ட ஆலோசனையில் ஈடுபட்டதாக வெளியாகிய தகவல், அதிமுக தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தவெகவுக்கு ஆதரவு அளித்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழக அரசியலில் தவெக - திமுக என்ற இரு துருவ அரசியல் உருவாகி, அதிமுக நிரந்தரமாக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் என்ற அச்சம் எடப்பாடி பழனிசாமி அணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் "எந்த சூழ்நிலையிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை" என அதிமுக வெளிப்படையாக அறிவித்தது.
மற்றொரு பக்கம், காங்கிரஸ் கட்சி மிக வேகமாக விஜய்க்கு ஆதரவு அளிக்க முன்வந்தது திமுகவுக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற 5 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதம் வழங்கியிருப்பது, "திமுகவின் வாக்குகளால் வென்றவர்கள் தற்போது வேறு அணிக்கு செல்கிறார்கள்" என்ற விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமியின் கோபத்திற்கான காரணம் வெளியாகி உள்ளது. வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததும் மிகுந்த அதிருப்தியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி தேவைப்பட்டால் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தர தயாராக தான் இருந்தார் என சொல்லப்படுகிறது. இதற்கிடையே செங்கோட்டையன் சில அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு பேசியதாக சொல்லப்படுகிறது.
லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் தேவையான நிதி உதவியை செய்வார், அதிமுகவில் உள்ள எம்எல்ஏக்களில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை அழைத்து வந்தால் அமைச்சர் பதவி தரப்படும் என கூறியதாக சொல்லப்படுகிறது. நேரடியாக கேட்டிருந்தால் கூட ஆதரவு தந்திருப்பேன் கட்சியை உடைக்கவா திட்டம் போடுகிறீர்கள்? என செங்கோட்டைனால் எடப்பாடி பழனிச்சாமி கோபப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே காங்கிரஸால் திமுகவும் கோபம் அடைந்திருக்கும் நிலையில் இரு கட்சிகளும் விஜய்க்கு ஆதரவளிக்கும் முடிவை கைவிட்டு விட்டன. இந்த நிலையில் தான் இந்த சூழலை பயன்படுத்தி ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது பாஜக. காங்கிரஸ் தமிழ்நாட்டிலேயே இல்லை என சொல்லி வந்த நிலையில் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்ததால் அந்த கட்சி 60 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமைச்சரவையில் பங்குபெறும் நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் விஜயால், கேரளா, புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பலம் பெறும் என்பதால் அது நடக்க கூடாது என பாஜகவும் நினைக்கிறது. இப்படி தமிழக வெற்றி கழகத்தால் அதிமுக, திமுக, பாஜக என அனைத்து கட்சிகளுமே கோபத்தில் இருப்பதால்தான் இவ்வளவு சிக்கல் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications