"அதிமுக ஆட்சி வந்ததும் ஊர், தெரு பெயர் தொடர்பான அரசாணை ரத்து செய்யப்படும்”.. எடப்பாடி பழனிசாமி பேச்சு
நாமக்கல்: "நீங்கள் எந்த தலைவர் பெயரையும் வைக்க வேண்டாம். ஒரு தலைவர் பெயரை வைத்து இன்னொரு தலைவர் பெயரை வைக்கவில்லை என்றால் பிரச்சனை வரும். அதிமுக ஆட்சி வந்ததும் ஊர், தெரு பெயர்களில் சாதி பெயர் நீக்கப்பட்டு தலைவர்கள் பெயர் சூட்டுவது தொடர்பான அரசாணை ரத்து செய்யப்படும்" என நாமக்கல் சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் அவர் ஏற்கனவே ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதியில் பிரசாரம் செய்திருந்த நிலையில் திருச்செங்கோடு, குமாரபாளையம் சட்டசபை தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.

நாமக்கல்லில் பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "நாமக்கல்லுக்கு அரசு மருத்துவமனை, சட்டக்கல்லூரி கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில்தான். வேங்கைவயல் விவகாரத்தில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ராஜவாய்க்காலின் எஞ்சிய பதிகளிலும் கான்கிரீட் தளம் அமைக்கப்படும். விவசாய நிலங்களில் சிப்காட் அமைப்பதை கைவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மரவள்ளி கிழங்கில் இருந்து எத்தனால் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.
இந்தியாவிலேயே போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. வேங்கைவயல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளே இன்னும் கண்டறியாத நிலையில், மதுரை சோழவந்தான் அருகே மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது போன்ற குற்றங்களைத் தடுக்க ஸ்டாலினுக்குத் திறமையில்லை. அதிமுக ஆட்சி அமைந்ததும் வணிகர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும்.
கோழி, முட்டை மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் அதிமுக ஆட்சி அமைந்ததும் நடைமுறைப்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் வீட்டு வரி 100 %, மின்கட்டணம் 67 % உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம். கடன் வாங்குவதில் ஸ்டாலின் சூப்பர் முதலமைச்சர்.
கரூரில் 41 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகுதான் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. எதிர்கட்சிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். மக்கள் எல்லா சம்பவங்களையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றனர். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை தீர்மானிக்கக் கூடிய தேர்தல். அதிமுக ஆட்சி காலத்தில் திமுக உள்பட எல்லா கட்சி கூட்டங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் நீதிமன்றங்களுக்கு சென்று கூட்டம் நடத்த வேண்டிய நிலை.
எத்தனையோ சோதனைகளை, திமுக-வின் சூதுகளை வென்று, மக்களின் குரலாக முழங்கி. வெற்றியைக் கண்டவர்கள் நம் அதிமுகவி-ன் இருபெரும் தலைவர்கள். அவர்கள் வழியில் மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை மக்கள் துணையோடு வீழ்த்தி, மக்களாட்சியை மீண்டும் வென்றெடுக்க சூளுரைப்போம்.
நீங்கள் எந்த தலைவர் பெயரையும் வைக்க வேண்டாம். ஒரு தலைவர் பெயரை வைத்து இன்னொரு தலைவர் பெயரை வைக்கவில்லை என்றால் பிரச்சனை வரும். அதிமுக ஆட்சி வந்ததும் இந்த அரசாணை ரத்து செய்யப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.
குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் வருவாய் கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குதல் மற்றும் மறுபெயரிடுதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டது. சாதி சார்ந்த பெயர்கள் நீக்கப்பட்டு, அண்ணா, கலைஞர், காமராசர் உள்ளிட்ட பெயர்களைச் சூட்டலாம் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications