தென் மாவட்ட நிர்வாகிகளை அழைத்த எடப்பாடி.. அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்.. ஆலோசனையில் பேசியது என்ன?
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்க்கலாமா என்பது தொடர்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆலோசனையில் மாவட்ட நிர்வாகிகள், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இல்லையென்றாலும், ஓபிஎஸ்ஸை மட்டுமாவது சேர்க்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளனர்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை எப்படியாவது மீண்டும் இணைக்க வேண்டும் என்று பாஜக முயற்சித்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் தரப்பில் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அதிமுகவுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூக வாக்குகளை எடப்பாடி பழனிசாமியால் கைப்பற்ற முடியவில்லை. அதற்கேற்ப சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகிய மூவரும் இணைந்து செயல்பட்டனர். அமித்ஷா தரப்பில் எவ்வளவோ முயற்சிகள் செய்யப்பட்ட போதும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்க்க முடியாது என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
ஆனால் செங்கோட்டையன் திடீரென தவெக பக்கம் சென்றது எடப்பாடி பழனிசாமிக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தியதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதனிடையே தென் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அதிமுகவின் முக்கிய தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்திருக்கிறார்.
வழக்கமாக ஓபிஎஸ் தொடர்பாக பேச்சை எடுத்தாலே, எடப்பாடி பழனிசாமி பேச்சை வேறு பக்கம் இழுத்து சென்றுவிடுவாராம். ஆனால் இம்முறை எடப்பாடி பழனிசாமியே ஓபிஎஸ்ஸை மீண்டும் சேர்க்கலாம் என்ற பேச்சை தொடங்கி இருக்கிறார். அப்போது அதிமுக நிர்வாகிகள் சிலர், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை சேர்க்கவில்லை என்றாலும், ஓபிஎஸ்ஸை மட்டுமாவது சேர்க்கலாம்.
அதுவே அதிமுகவின் தொண்டர்கள் மற்றும் மக்களின் எண்ணமாக உள்ளது என்று கூறியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் இந்த மனமாற்றம் காரணமாக பொதுக்குழுவில் சில பாசிட்டிவ் தீர்மானங்கள் வெளியாகலாம் என்று கருதப்படுகிறது. அதேபோல் தென் மாவட்ட நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பும் தெரிவித்திருக்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த மனமாற்றத்திற்கு ஓபிஎஸ்ஸின் டெல்லி பயணமே காரணமாக அமைந்துள்ளது. ஏனென்றால் அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ், மீண்டும் அதிமுகவில் இணைவதே முதன்மை இலக்கு என்று கூறி இருக்கிறார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியுடன் அமித்ஷா பேசியதன் காரணமாக இந்த முடிவுக்கு அவர் இறங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications