ஓ பன்னீர்செல்வத்தின் அடுத்த அதிரடி நகர்வு என்ன? ஓபிஎஸ் ஆதரவாளர் கண்ணன் விளக்கம்
புதிய வழக்கு தொடர்ந்த ஓ பன்னீர்செல்வத்தின் அடுத்த அதிரடி நகர்வு என்ன என்பது குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் கண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சொன்னால் கூட, பொதுக்குழு தீர்மானம் என்பது அதிமுக சட்ட திட்டங்களுக்கு எதிராக இருந்தால் அது நிச்சயமாக செல்லாது. எனவே அதன் அடிப்படையில் தான் தீர்ப்பும் வரும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கண்ணன் கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் புதிய வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் புதிய வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மனுவில், எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமித்தது, ஓ.பி.எஸ் உள்ளிட்ட 4 பேரை கட்சியிலிருந்து நீக்கியது ஆகிய தீர்மானங்களை ரத்து செய்ய கோரியுள்ளனர். ஏற்கனவே உச்ச நீதிமன்றம் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ள நிலையில், தீர்மானங்களை எதிர்த்து புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்துள்ளது.

கண்ணன் பேட்டி
இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் கண்ணன் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றுக்கு ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்டுள்ள புதிய வழக்கு குறித்து பேட்டி அளித்தார். அப்போது கண்ணன் கூறுகையில், அதிமுக பொதுக்குழு செல்லும் என்று எந்த அடிப்படையில் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் சொல்லியிருக்கிறார்கள் என்றால், ஜூன் 23ல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் கூட்டப்பட்ட தீர்மானத்தில் எந்தவித தீர்மானம் செல்லும் செல்லாது என்று இல்லாமல், தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டது. பொதுக்குழு பாதியிலேயே ரத்தானது. அதனால் அவசர அவசரமாக பொதுக்குழு மீண்டும் கூட்டப்பட்டது என்கிற அளவில் தான் இருந்தது. அந்த அடிப்படையில் தான் ஜூன் 23ன் நீட்சியாகவே ஜூலை 11 நடந்துள்ளதாகவும், அந்த வகையில் தான் சரி என்று உச்ச நீதிமன்றம் கூறிருக்கிறது.

சட்டவிதிகள்
அந்த அடிப்படையில் பொதுக்குழு கூட்டப்பட்டது சரி, ஆனால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சரியா தவறா என்பதை கீழமை நீதிமன்றங்களில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.அந்த வகையில் அந்த தீர்மானங்கள் அனைத்தும், அதிமுக சட்டதிட்ட விதிகளுக்கு முரணாக இருந்தது. அந்த முரண்களை சுட்டிக்காட்டித்தான் வழக்கு நாம் தொடுத்திருக்கிறோம்.

உயர்நீதிமன்றம்
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று வாதிடப்போகிறோம். உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடியே நாங்கள் உயர்நீதிமன்றத்திற்கு அடுத்தபடியாக நகர்ந்துள்ளோம். அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் அதிமுக சட்டதிட்ட விதிகளுக்கு முரணாக இருக்கிறது என்பதை நிரூபிப்போம்.

நிச்சயம் செல்லாது
எப்படி என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு சட்டமன்றத்தில் இருக்கிறது என்றால், அந்த அரசு பல சட்டங்களை இயற்றலாம். ஆனால் இந்திய அரசியலமைப்புக்கு எதிராக ஒரு சட்டத்தை இயற்றிவிட முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதற்காக இந்திய அரசியலமைப்புக்கு எதிராக சட்டத்தை நிறைவேற்றி, அதை நடைமுறைப்படுத்திட முடியாது.அதுபோல்தான் அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சொன்னால் கூட, பொதுக்குழு தீர்மானம் என்பது அதிமுக சட்ட திட்டங்களுக்கு எதிராக இருந்தால் அது நிச்சயமாக செல்லாது. எனவே அதன் அடிப்படையில் தான் தீர்ப்பும் வரும் என்று எதிர்பார்க்கிறோம்" இவ்வாறு ஓபிஎஸ் ஆதரவாளர் கண்ணன் கூறினார்.

ஹைகோர்டில் வாதம்
ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை இன்று தொடங்கி உள்ளது. ஓபிஎஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன் வாதிடுகையில், அதிமுக பொதுக்குழுவில் கட்சி கட்டமைப்பை மாற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே ஜூலை 11ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் செயல்பட தடை விதிக்க வேண்டும் . ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியது சட்டவிரோதமானது . எந்த நோட்டீசும் அளிக்காமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். கட்சியை விட்டு நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று மானோஜ் பாண்டியன் வாதிட்டார்.












Click it and Unblock the Notifications