செங்கோட்டையன் போனபோதும்.. விஜய்யை விமர்சிக்காத எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன?
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின்னரும் கூட, விஜய்யை விமர்சிக்காமல் எடப்பாடி பழனிசாமி கடந்து போவது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இதனால் விஜய் எப்படியும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைவார் என்று எடப்பாடி பழனிசாமி நம்புவதாக சொல்லப்படுகிறது.
கரூர் சம்பவத்தின் போது தவெக தலைவர் விஜய்க்கு முழுமையாக ஆதரவு அளித்திருந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அப்போது நடந்த பிரச்சாரக் கூட்டங்களின் போது எடப்பாடி பழனிசாமி தவெக கொடியை பார்த்து, கொடி பறக்குது.. பிள்ளையார் சுழி போட்டாச்சு என்றெல்லாம் பேசினார். இதனால் அதிமுக - தவெக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியதாக சொல்லப்பட்டது.

ஆனால் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் விஜய் தலைமையில் தான் கூட்டணி, அவர் தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அதிமுகவின் கூட்டணி அழைப்பை விஜய் நிராகரித்துவிட்டதாக கூறப்பட்டது. அதன்பின் அதிமுகவின் முக்கிய தலைவர்களான கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் விஜய்யை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர்.
அதிமுகவின் 2ஆம் கட்டத் தலைவர்கள் விஜய் விமர்சித்தாலும், அது பெரியளவில் எடுபடவில்லை. இப்படியான சூழலில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், திடீரென தவெக பக்கம் தாவினார். கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகளையும் செங்கோட்டையன் தவெகவுக்கு அழைத்து சென்றார்.
இதனால் அந்த தொகுதியில் அதிமுகவுக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகியது. செங்கோட்டையன் இணைந்ததையொட்டி, தவெக மிகப்பெரிய அளவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. இதன்பின் கோபிசெட்டிப்பாளையத்தில் பொதுக்கூட்டம் போட்ட எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்தார். ஆனால் விஜய் என்ற பெயர் கூட எடப்பாடி பழனிசாமி வாயில் இருந்து வரவில்லை.
இதனால் விஜய்யை விமர்சிக்காமல் எடப்பாடி பழனிசாமி அமைதி காப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பின்னணியில் எடப்பாடி பழனிசாமி ஒரு கணக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மூலமாக விஜய் 3வது அணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்பட்டது.
ஆனால் ஓபிஎஸ் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்ததன் மூலம் அவர் என்டிஏ கூட்டணியில் இணைய இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. அதேபோல் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக பேசி வருகிறது. தேர்தலின் போது விஜய் தனித்துவிடப்பட்டால், அவர் அதிமுகவை நோக்கி வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி நம்பி இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications