திமுக கூட்டணியில் எங்களுக்கு சீட் கிடைக்கும்.. துண்டு போட்ட சமத்துவ மக்கள் கழகம் எர்ணாவூர் நாராயணன்
சென்னை: "இந்த சட்டசபை தேர்தலிலும் திமுகவுக்கு ஆதரவு அளிக்கிறோம். வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கான வெற்றி பிரகாசமாக இருக்கிறது. கூட்டணி கட்சிகள் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசும்போது, எங்களிடம் பேசுவதாக கூறியுள்ளனர். நாங்கள் போட்டியிடும் தொகுதிகள் கேட்பதற்கும் தயாராக இருக்கிறோம், திமுக தலைவர் கொடுப்பதற்கும் தயாராக உள்ளார்." என சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொமதேக, மமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் சிறிய கட்சிகள் பலவும் இந்தக் கூட்டணியில் உள்ளன.

எர்ணாவூர் நாராயணன் தலைமையிலான சமத்துவ மக்கள் கழகம் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து வருகிறது. எனினும், கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இந்தக் கட்சிக்கு சீட் ஒதுக்கவில்லை. அடுத்த முறை தருகிறோம் என திமுக தரப்பில் சொன்னதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த முறை சீட் எதிர்பார்த்து வருகிறது அந்தக் கட்சி. ஸ்ரீவைகுண்டம் தொகுதியை அக்கட்சி எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கும்பகோணத்தில் டெல்டா மண்டல சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.இதில் பங்கேற்ற சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சமத்துவ மக்கள் கழகம் தொடர்ந்து கடந்த 3 தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்திருந்தோம். 2026-ல் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலிலும் திமுகவுக்கு ஆதரவு அளிக்கிறோம்.
இந்த தேர்தல் 3 முனைப் போட்டியாக நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஏழை பெண்களுக்கு தேவையான உதவிகளை தமிழக முதல்வர் செய்து வருகிறார். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் குழு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னையில் மாநில கூட்டம் நடைபெறவுள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கான வெற்றி பிரகாசமாக இருக்கிறது. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசும் போது, எங்களிடம் பேசுவதாக கூறியுள்ளனர். நாங்கள் போட்டியிடும் தொகுதிகள் கேட்பதற்கும் தயாராக இருக்கிறோம், திமுக தலைவர் கொடுப்பதற்கும் தயாராக உள்ளார்.
திமுக மற்றும் கூட்டணி கட்சியில் தான் கட்டமைப்பு உள்ளது. விஜய், அதிமுக யார் வந்தாலும், 2026 தேர்தலில் திமுகவின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது. அதிமுக ஆட்சியின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை எதுவும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் முன்னாள் எம்.எல்.ஏ இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து, அதிமுக கூட்டணி சார்பில் நாங்குனேரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். சரத்குமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து பிரிந்து சமத்துவ மக்கள் கழகத்தை நிறுவினார். தற்போது இவரது கட்சி திமுகவுக்கு ஆதரவு அளித்து வருகிறது.












Click it and Unblock the Notifications