அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவு..வாபஸ் பெற்ற ஓ.பன்னீர் செல்வத்திற்கு நன்றி சொன்ன அண்ணாமலை
அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பன்னீர் செல்வத்திற்கும் நன்றி கூறியுள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தென்னரசுவிற்கு ஆதரவு தருவதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பன்னீர் செல்வத்திற்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணி பிரச்சார களத்தில் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஓ.பன்னீர் செல்வம் அணியும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிக்குழுவையும் நியமனம் செய்தனர்.

பாஜகவின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கா? ஓ.பன்னீர் செல்வத்திற்காக என்பது தெளிவாக தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் டெல்லி சென்று இருந்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் இன்று காலையில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். இருவரையும் தனித்தனியே சந்தித்து பேசி சமாதனப்படுத்தும் முயற்சி மேற்கொண்டார்.
கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தேசிய கட்சியாக உள்ள பாஜக ஒருபோதும் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்காது என்று கூறினார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக ஒரே ஒரு வேட்பாளரை நிறுத்தி அங்கீகரிக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று இரண்டு தரப்பினரையும் வலியுறுத்தினோம். கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தினோம் என்றும் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு தர வலியுறுத்தினோம். ஒரே ஒரு வேட்பாளர் அதோடு இரட்டை இலை சின்னம் என்பது கூடுதல் பலத்தை தரும் என்றும் பேசினோம்.
பழனிச்சாமி தரப்பு வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வத்திடம் கேட்டுக்கொண்டோம். திமுகவினர் படை பலம், பணபலத்தை இறக்கி விடுகின்றனர். தமிழக மக்களின் நலன் கருதி நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். கூட்டணி தர்மத்தை காக்க எங்களின் சக்திக்கு மீறி உழைத்து வேட்பாளரை வெற்றி பெற வைப்போம் என்றும் அண்ணாமலை கூறினார்.
இதனையடுத்து கடந்த 2 நாட்களாக அடுத்தடுத்து அரசியல் நிகழ்வுகள் அரங்கேறின. ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தங்கள் வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியபடி பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்த தென்னரசு அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அதிமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம் எனக்கு வந்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப நான் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஒதுக்கீடு செய்வேன். அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட்டு தரும் ஏ, பி படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
இதனையடுத்து தமிழக பாரதிய ஜனதா கட்சி இன்று தனது நிலைப்பாட்டினை அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவு தரப்படும் என்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் வேட்பாளரை நிறுத்திய எடப்பாடி பழனிச்சாமிக்கும் தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பன்னீர் செல்வத்திற்கு நன்றி என்று அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications