ரெய்டு நடந்து 3 நாள்.. ஈரோடு தேர்தல் அதிகாரியாக இருந்த சிவக்குமார் மாற்றம்.. இனி கோவை துணை ஆணையர்!
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியாக இருந்த மாநகராட்சி ஆணையர் சிவக்குமார், கோவை மாநகராட்சி துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் சிவக்குமாரின் சென்னை மற்றும் ஈரோடு வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை நடத்திருந்தது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் அதிகாரியாக செயல்பட்டார். இவருக்கு ஈரோடு மாநகராட்சி ஆணையராக பணியாற்றுவதற்கு முன், திருப்பூர் மாநகராட்சி ஆணையராகவும், பல்லவபுரம் நகராட்சி ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.
பல்லவரபும் நகராட்சி ஆணையராக சிவக்குமார் பணிபுரிந்த போது அவர் மீது ஏராளமான ஊழல் முறைகேடு, லஞ்ச புகார்களில் சிக்கியுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு நிலுவையில் இருந்து வந்தன.

இதனிடையே பதவி உயர்வு அடிப்படையில் திருப்பூர் மாநகராட்சி ஆணையராக சிவக்குமார் மாற்றப்பட்டார். இதையடுத்து ஈரோடு மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் பல்லவபுரம் நகராட்சியில் பணியாற்றிய காலத்தில் குவிந்த புகார்களைத் தொடர்ந்து சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனடிப்படையில் மூன்று நாட்களுக்கு முன் ஈரோடு மற்றும் சென்னையில் உள்ள சிவக்குமார் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இந்த சோதனையை நடத்தியது. சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த சிவக்குமார், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த சிவக்குமார், கோவை மாநகராட்சி துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் சிவக்குமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை நடைபெற்றிருந்த சூழலில், அடுத்த சில நாட்களில் சிவக்குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications