அதிமுக Vs பாஜக.. அவுகளுக்கு 6,000 ஓட்டுதான்.- டெபாசிட்டே போகனும்பா- ரணகளமாகும் ட்விட்டர் ஸ்பேஸ்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக, பாஜக கூட்டணிகள் குழிபறிப்பது தொடர்பாக சமூக வலைதளங்களில் உரையாடுகின்றனர்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்வைத்து ட்விட்டர் ஸ்பேஸில் அதிமுக, பாஜக ஆதரவாளர்கள் தெரிவித்து வரும் கருத்துகள் ரணகளமாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி, தேமுதிக வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும் குழப்பங்களுக்கு இடையே அதிமுகவின் வேட்பாளராக தென்னரசு களமிறங்கி உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலை முன்வைத்து அதிமுக ஓபிஎஸ், அதிமுக இபிஎஸ், பாஜக ஆகிய மூன்றும் பல்வேறு ஆட்டங்களை விளையாடின. அதிமுகவின் இரு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு பாஜக ஆதரவுக்காக தவம் கிடந்தன.
பின்னர் ஒரு கட்டத்தில் பாஜகவை அதிமுக இபிஎஸ் அணி கழற்றிவிட்டது. ஆனாலும் பாஜகவை விடாப்பிடியாக ஓபிஎஸ் அணி தொங்கி நின்றது. பின்னர் உச்சநீதிமன்றம் வரைக்கும் இந்த விவகாரமும் போனது. அப்போது அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற பல்லவியை பாஜக பாடியது.

உச்சநீதிமன்ற தலையீட்டுக்குப் பின்னர், வேட்பாளரை அதிமுக ஓபிஎஸ் அணி வாபஸ் பெற்றது. தற்போது இபிஎஸ் அணி கை ஓங்கிய நிலையில் இருக்கிறது. அதிமுகவின் ஒருங்கிணைந்த வேட்பாளராக தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். குக்கர் சின்னம் கிடைக்காத ஒற்றை காரணத்துக்காக அமமுக போட்டியில் இருந்து விலகுகிறது என டிடிவி தினகரன் அறிவித்துவிட்டார். அதேநேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிரசாரத்துக்கு ஓபிஎஸ் அணி, பாஜக வராமல் இருப்பது நல்லது என நினைக்கிறதாம் அதிமுக இபிஎஸ் அணி.

என்னதான் கூட்டணிகள் என்றாலும் அதிமுக- பாஜக இடையேயான யுத்தம் ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டுமல்ல.. ட்விட்டர் ஸ்பேஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் கடுமையாக எதிரொலிக்கிறது. அதிமுகவினர் நடத்துகிற ட்விட்டர் ஸ்பேஸ்களில், பாஜகவை இழிவாகவும் கடுமையாகவும் விமர்சிக்கின்றனர் அதிமுகவினர். பாஜகவுக்கு மொத்தமே 6,000 ஓட்டுகள் கூட இருக்காது; அவர்கள் நம்மை மிரட்டுவதா? என ட்விட்டர் ஸ்பேஸில் கொந்தளித்திருக்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.
இதற்கு பதிலடியாக பாஜகவினர், இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டாலும் ஜெயிக்க விட்டுற கூடாது.. டெபாசிட்டே காலியாகனும்.. இரட்டை இலை கிடைச்சும் டெபாசிட்டே கிடைக்கலைன்னு நிலைமையை உருவாக்கனும். ஒவ்வொரு பாஜககாரனும் அதிமுகவுக்கு ஓட்டுப் போடவே கூடாதுன்னு முடிவு எடுக்கனும்.. அப்பதான் நம்மை நம்பியே அதிமுக இருக்கும் என கொட்டித் தீர்க்கின்றனர். இப்போது இந்த ட்விட்டர் ஸ்பேஸ் உரையாடல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதிமுக, பாஜகவினர் பகிரங்கமாகவே சமூக வலைதளங்களில் மோதி வருகின்றனர். இதனால் சமூக வலைதள பக்கங்கள் ரணகளமாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications