இறங்கிட்டாராமே எடப்பாடி? ‘மாஸ்டர் மூவ்’! டெல்லி செல்லும் மாஜி.. இடைத்தேர்தலில் அதிமுக போட்டி உறுதி?
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன. ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் கையெழுத்திட்டால் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற நிலையில், தனது அணிக்கு இரட்டை இலை சின்னம் கோரி டெல்லியில் நகர்வைத் தொடங்கி இருக்கிறாராம் ஈபிஎஸ்.
எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டாலும் ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவிப்பார் எனக் கூறப்படுகிறது.
கட்சியின் வரவு, செலவு கணக்கை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்ததை தேர்தல் ஆணையம் ஏற்றதை சுட்டிக்காட்டி சின்னத்தை பெற முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
100% சான்ஸே இல்லை.. எடப்பாடி பக்கம் சுழன்று அடிக்கும் காற்று! புட்டு புட்டு வைத்த புள்ளி! கேம் ஓவரா?
இடைத்தேர்தல்
2021ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா, அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட யுவராஜை வீழ்த்தி எம்.எல்.ஏ ஆனார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, உடல் நலக்குறைவால் திருமகன் ஈவெரா காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி கலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் போட்டி
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சந்திக்கும் முதல் சட்டமன்ற இடைத்தேர்தல் இது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியே களமிறங்க உள்ளதாகத் தெரிகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி ஈரோடு கிழக்கு தொகுதி எங்களுடைய தொகுதி, எனவே இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் தான் போட்டியிடும். திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சந்தித்து ஆதரவு கோருவோம், வேட்பாளர் யார் என்பது இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஈபிஎஸ் - ஓபிஎஸ் திட்டங்கள்
தன் அணியே உண்மையான அதிமுக என்பதை நிரூபிக்கும் வகையில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக நேரடியாக களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ்ஸுக்கு முடிவுகட்டும் தேர்தலாக இதைப் பார்க்கிறார் ஈபிஎஸ். மறுபுறம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணியும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து ஆலோசிக்க வரும் 23ஆம் தேதி மா.செக்கள் கூட்டத்தை நடத்தவுள்ளார் ஓபிஎஸ்.
பாஜக தனித்துப் போட்டி
இதற்கிடையே பாஜக தனித்து போட்டியிட வாய்ப்புள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மாநில பாஜக தலைவர் அண்ணாமலை 14 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்ட நிலையில் மீண்டும் இந்த இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது. அதிமுக, இந்த இடைத்தேர்தலில் போட்டியிட இறங்கினால், பாஜக தனித்துக் களமிறங்கும் எனக் கூறப்படுகிறது.
தமாகா முடிவு
இந்தநிலையில், தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன், எடப்பாடி பழனிசாமி அணியினர் இன்று ஆலோசனை நடத்தினர். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் தமாகா போட்டியிட்டதால், கூட்டணி தர்மப்படி இடைத்தேர்தலிலும் தங்களுக்கே சீட் வேண்டும் என்று ஜிகே வாசன், எடப்பாடி பழனிசாமியிடம் கோரியுள்ளாராம். எனினும், அதிமுக கூட்டணி சார்பில் தமாகா போட்டியிட்டால் தற்போது இரட்டை இலை சின்னம் கிடைப்பது சிக்கல் தான் என்ற நிலை இருக்கிறது.
இரட்டை இலை
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை. தீர்ப்பு வெளிவந்து யாருக்கு அதிமுக என்பது முடிவுக்கு வந்தாலும், இரட்டை இலை சின்னம் என்பது கேள்விக்குறியாக இருக்கும். சின்னத்தை யாருக்கு வழங்குவது என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும். இதனால், இந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. ஆனால், ஈபிஎஸ், இதை விடப்போவதில்லை என்கின்றன வந்து கொண்டிருக்கும் தகவல்கள்.
ஈபிஎஸ் தரப்பு மூவ்
இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கான முயற்சிகளை ஈபிஎஸ் தரப்பு தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி தரப்பு தேர்தல் ஆணையத்தில் தங்களுக்கு இரட்டை இலை சின்னம் கோரி முறையிட்டால், ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதால், தேர்தல் ஆணையத்தில் முன்கூட்டியே நிலையை விளக்கி, தனது தரப்புக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என ஈபிஎஸ் தரப்பு முறையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் நகர்வு
ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் சட்ட அமைச்சரான ராஜ்யசபா எம்.பி சி.வி.சண்முமம் இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லி சென்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக அதிமுக வட்டாரத்தில் தகவல்கள் பரபரக்கின்றன. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பின் தாக்கல் செய்யப்பட்ட கட்சியின் வரவு-செலவு கணக்கை தேர்தல் ஆணையம் ஏற்றது. கட்சியின் வரவு-செலவு கணக்கை ஏற்றதை சுட்டிக்காட்டி இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கும்படி வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.